பிரதமர் வாயை திறந்தாலே பொய் தான்.. ரவுடிகளை வேற அழைத்து வருகிறார்கள்.. வெளுத்து வாங்கும் மம்தா
கொல்கத்தா: பிரதமர் நரேந்திர மோடி வாயை திறந்தாலே பொய்தான் பேசுகிறார் என்றும் பாஜக மேற்கு வங்கத்திற்கு ரவுடிகளை அழைத்து வருவதாகவும் மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் வரும் மார்ச் 27ஆம் தேதி 30 தொகுதிகளுக்கு முதல்கட்டமாகத் தேர்தல் நடைபெறுகிறது. மொத்தம் எட்டு கட்டங்களாக நடத்தப்படும் தேர்தலின் முடிவு மே 2ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளது.
தேர்தல் நெருங்க நெருங்க தலைவர்கள் சூறாவளி பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடும் மோதல் நிலவுகிறது. இரண்டு கட்சிகளைச் சேர்ந்தவர்களும் மாறி மாறி குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
யார் அந்நியர்கள்
இந்நிலையில், மேற்கு வங்க மாநிலம் பிஷ்ணுபூரில் நடைபெற்ற பேரணியில் பேசிய திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, தேர்தலுக்காக வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களே அந்நியர்கள் என்றும் பல ஆண்டுகளாக நம்முடன் இருப்பவர்களை அந்நியர்கள் என்று கருத முடியாது என்றும் தெரிவித்தார். மேலும், அவர்கள் பல ஆண்டுகளாக வங்கத்தில் இருந்து வங்கத்துடன் கலந்துவிட்டார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
தேவையற்ற பிரச்சினை
தேர்தல் காலங்களில் உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் இருந்து வரும் ரவுடிகளையே தான் அந்நியர்கள் என்று குறிப்பிடுவதாகவும் அவர் தெரிவித்தார். அவர்கள் தேர்தல் சமயங்களில் மேற்கு வங்கத்தில் தேவையற்ற பிரச்சினைகளை உருவாக்க முயல்வதாகத் தெரிவித்த மம்தா, இதனால் அவர்களை தொடர்ந்து அந்நியர்கள் என்றே அழைப்பேன் என்றும் அதில் எந்த மாற்றமும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
வாயை திறந்தாலே பொய்
பிரதமர் பதவியின் மீது தனக்கு மிகப் பெரிய மரியாதை இருப்பதாகத் தெரிவித்த மம்தா, ஆனால் அதற்கு உரிய மரியாதையை அளிக்காமல் பிரதமர் மோடி தொடர்ந்து பொய் கூறிவருவதாகவும் அவர் விமர்சித்தார். மேலும், மேற்கு வங்கத்தில் ரவுடிகள் கலாசாரத்தை பாஜக கொண்டு வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார், மேலும், பாஜக ஆளும் மாநிலங்களிலேயே பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று அவர் சாடினார்.
விவசாயிகள் போராட்டம்
தொடர்ந்து விவசாய சட்டங்கள் குறித்துப் பேசிய அவர், விவசாயிகள் நடு ரோட்டில் அமர்ந்த மாதக் கணக்கில் போராடி வருகிறார்கள். ஆனால் மோடியும் அமித் ஷாவும் இது குறித்து துளியும் கவலை கொள்ளவில்லை. விவசாயிகள் போராடும் இடங்களில் இரும்பு ஆணிகள் பதிக்கப்பட்டது ஏன்? பிரதமருக்குப் பெரு நிறுவனங்கள் மீது மட்டுமே அக்கறை விவசாயிகள் மீது இல்லை என்றும் கடுமையாக விமர்சித்தார்.