"அதுவேறு.. இதுவேறு! அம்பானி & அதானி உடன் கைகோர்க்க இது தான் காரணம்" மம்தா கொடுத்த பளீச் விளக்கம்
கொல்கத்தா: அம்பானி மற்றும் அதானி குழுமங்களிடம் இருந்து முதலீடு பெற்றதற்கான காரணம் குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விளக்கி உள்ளார்.
மேற்கு வங்கத்தில் இப்போது மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அவர் தொடர்ச்சியாக பாஜகவை கடுமையாக விமர்சித்தே வருகிறார்.
ஜஸ்ட் 10 நிமிஷம் தான்.. 6 பேர் காலி.. சரசரவென சுட்டுத்தள்ளிய 22 வயது இளைஞர்.. நடுங்கும் சிகாகோ
மத்திய அரசு குறிப்பிட்ட இரு நிறுவனங்களுக்குச் சாதகமாக நடந்து கொள்வதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து சாடி வருகின்றனர். இந்தச் சூழலில் மம்தா சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
மம்தா பானர்ஜி
பிரபல ஆங்கில டிவி சேனல் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, இரு முக்கிய குழுமங்களிடம் பெற்ற முதலீடு குறித்து விளக்கி உள்ளார். அரசியலையும் தொழில்துறையையும் கலக்கக் கூடாது என்று குறிப்பிட்ட அவர், தனது அரசு கெளதம் அதானி மற்றும் முகேஷ் அம்பானியின் கூட்டு நிறுவனங்களான அதானி குழுமம் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸுடன் கைகோர்க்கத் தேர்ந்தெடுத்ததற்கு மாநிலத்தின் வளர்ச்சியே காரணம் என்றும் கூறினார்.
எதற்காக
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "அரசியல் என்பது வேறு, தொழில் துறை என்பது வேறு. நாம் வளர வேண்டுமானால் அனைவரையும் உள்ளடக்க வேண்டும். அனைவருக்கும் பலனைப் பிரிக்க வேண்டும். எனக்கு யார் முதலீடு செய்கிறார்கள் என்பது குறித்து கவலையில்லை. இதனால் யார் பலன் பெறுவார்கள் என்பதிலேயே கவலை. மக்களின் நலனுக்காகவே முதலீடுகளைப் பெற்றுள்ளோம்.
அடிப்படை வேறுபாடு
ஆனால், மத்திய அரசு இப்படிச் செய்வதில்லை. அவர்கள் பாஜக எண்ணம் கொண்ட தொழில் அதிபர்களை மட்டுமே ஊக்குவிக்கிறார்கள். பாஜக எண்ணம் கொண்டவர்களை மோடி அரசு ஊக்குவிக்கிறது, அவர்கள் பணத்தை எங்கே வைத்திருக்கிறார்கள், எங்கிருந்து பணம் பெறுகிறார்கள் என யாருக்கும் தெரியாது. இதுதான் எங்களுக்கும் அவர்களுக்கும் உள்ள அடிப்படை வேறுபாடு.
மக்கள் நலன்
தொழில்துறையினரை உருவாக்கி, அனைவரையும் வளர்த்து எடுப்பது தான் எங்களது வேலை. அதானி குழுமம் இங்கு டேட்டா பேங்க்கில் முதலீடு செய்துள்ளது. முகேஷ் அம்பானியின் குழுமம் இங்கு கேபிள் தரையிறங்கும் நிலையம் உருவாக்கப்படுகிறது. ஒவ்வொரு மூலையிலிருந்தும் முதலீடுகளை ஈர்த்து, மக்கள் நல்லது செய்ய வேண்டும் என்பதற்காகவே நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம்" என்றார்.
மேற்கு வங்க அரசு
கடந்த ஜூன் மாதத்தில், கொல்கத்தாவின் புறநகரில் உள்ள நியூ டவுன் பகுதியில் பெங்கால் சிலிக்கான் பள்ளத்தாக்கில் டேட்டா மையத்தை அமைக்க மேற்கு வங்க அரசு அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு ஒப்புதல் அளித்தது. டேட்டா மையத்திற்காக 51.75 ஏக்கர் நிலத்தை 99 ஆண்டுகளுக்கு மேற்கு வங்க அரசு அதானி குழுமத்திற்கு குத்தகைக்கு அளித்துள்ளது. பெங்கால் சிலிக்கான் பள்ளத்தாக்கு ஒரு புதுமையான தகவல் தொழில்நுட்ப மையமாகும். பலருக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
அதானி குழுமம்
முன்னதாக இந்த ஆண்டு ஏப்ரலில் வங்காள உலகளாவிய வணிக உச்சி மாநாடு நடைபெற்றது. அதில் துறைமுக உள்கட்டமைப்பு, டேட்டா மையங்கள் மற்றும் கடலுக்கடியில் கேபிள்கள், கிடங்குகள் மற்றும் தளவாடங்கள் ஆகியவற்றில் சிறந்து விளங்கும் மையங்களுக்கு அடுத்த 10 ஆண்டுகளில் ரூ.10,000 கோடியை மேற்கு வங்கத்தில் முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 25 ஆயிரம் பேர் வேலைவாய்ப்புகளைப் பெறுவார்கள் எனக் கூறப்பட்டு உள்ளது.
அம்பானி குழுமம்
அதேபோல ரிலையன்ஸின் டெலிகாம் நிறுவனமான ஜியோ மேற்கு வங்கத்தில் முதலீடு செய்துள்ளது. அங்கு கேபிள் தரையிறங்கும் நிலையத்தை ரிலையன்ஸ் உருவாக்கி வருகிறது. இது ஐரோப்பிய மற்றும் ஆசிய நாடுகளுடன் மேற்கு வங்கத்தின் தொடர்பை அதிகரிக்கும். இதன் மூலம் முக்கிய ஐடி நிலையமாக மேற்கு வங்கம் மாறும். மேற்கு வங்கத்தில் சுமார் 1000 கோடி ரூபாய் முதலீடு செய்ய ரிலையன்ஸ் ஒப்புக்கொண்டுள்ளது.