"பாதி நாள் வெளிநாட்டில் இருந்தால்".. ராகுல் காந்தியை சீண்டிய மம்தா பானர்ஜி.. முற்றும் மோதல்!
கொல்கத்தா: காங்கிரஸ் மூத்த எம்பி ராகுல் காந்தி குறித்து மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தெரிவித்த கருத்து தேசிய அரசியலில் பெரிய விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தற்போது தேசிய அளவில் கவனம் பெற தொடங்கி உள்ளார். முக்கியமாக கோவா சட்டசபை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் முக்கிய கட்சியாக உருவெடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
உத்தர பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் அடுத்த வருடம் நடக்க உள்ள சட்டசபை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முக்கிய கேம் சேஞ்சராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2024 லோக்சபா தேர்தலில் 300 இடங்களில் காங்கிரஸ் வெல்ல முடியாது.. குலாம் நபி ஆசாத்
எதிர்க்கட்சி
முக்கியமாக தேசிய அரசியலில் காங்கிரசை அப்புறப்படுத்தி திரிணாமுல் பிரதான எதிர்க்கட்சியாகும் அளவிற்கு தீவிர பணிகளை மேற்கொண்டு வருகிறது. மம்தா பானர்ஜி பல்வேறு மாநிலங்களுக்கு பயணம் மேற்கொண்டு மாநில அளவில் இருக்கும் காங்கிரஸ் - பாஜக அல்லாத தலைவர்களை சந்தித்து வருகிறார். காங்கிரஸ் முக்தி பாரத் என்ற பாஜகவின் திட்டத்தை பாஜகவை விட மம்தாதான் மிகவும் தீவிரமாக கடைப்பிடித்து வருகிறார்.
என்ன சொன்னார்
இந்த நிலையில்தான் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி குறித்து மம்தா பானர்ஜி சொன்ன கருத்து தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வெளிநாட்டில் இருந்து கொண்டு யாரும் அரசியல் பண்ண முடியாது. பாதி நாட்கள் வெளிநாட்டில் இருந்து கொண்டு இந்தியாவில் அரசியல் செய்ய வேண்டும் என்று நினைக்க கூடாது. அரசியல் என்றால் தீவிரமாக உழைக்க வேண்டும்.
உழைக்க வேண்டும்
தொடர்ந்து அரசியல் பணிகளை செய்பவர்கள்தான் அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.
வெளிநாட்டில் இருந்து கொண்டு இந்தியாவில் எப்படி அரசியல் செய்ய முடியும் என்று மம்தா பானர்ஜி ராகுல் காந்தி பெயரை குறிப்பிடாமல் அவரை விமர்சனம் செய்துள்ளார். நேற்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் ஷரத் பவாரை சந்தித்த பின் செய்தியாளர்களை சந்தித்த மம்தா பானர்ஜி எதிர்க்கட்சி என்பதாக சாதாரணமாக இருந்தால் அது ஆளும் கட்சிக்கு சாதகமாக இருக்கும்.
அரசியலமைப்பு
இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் எதிர்க்கட்சிகள் வலுவாக இருக்க வேண்டும். எதிர்க்கட்சி வலிமை இன்றி இருப்பதால் மக்களுக்கு எந்த பயனும் இருக்காது. இதனால்தான் நான் நாடு முழுக்க பயணம் மேற்கொண்டு வருகிறேன். வங்கத்தில் இருந்து மாநிலம் மாநிலமாக நான் பயணம் மேற்கொள்ள இதுதான் காரணம். மாநில அரசியல் கட்சிகள், அதன் கட்டமைப்பு மிகவும் வலுவாக இருக்க வேண்டும். மாநில கட்சிகள் எல்லாம் ஒன்றாக இருந்தால் பாஜகவை எளிதாக வீழ்த்த முடியும்.
கூட்டணி
எனக்கு எதிர்க்கட்சிகளின் கூட்டணியை தலைமையேற்று நடத்த வேண்டும் என்று ஆசையில்லை. என்னை கேட்டால் இப்போது ஐக்கிய முற்போக்கு கூட்டணி உயிர்ப்புடன் இல்லை. ஐக்கிய முற்போக்கு கூட்டணி எங்கே இருக்கிறது. நாம் முதலில் பிரச்சனைகளை சரி செய்ய வேண்டும். பின்னர் கூட்டணியை வலுப்படுத்த வேண்டும் என்று ஐக்கிய முற்போக்கு கூட்டணி குறித்து மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.