குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு- கொல்கத்தாவில் மமதா பானர்ஜி 5-வது பேரணி
கொல்கத்தா: மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தம் மற்றும் என்.ஆர்.சி.க்கு எதிராக கொல்கத்தாவில் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி இன்று 5-வது பேரணியை நடத்தினார்.
குடியுரிமை சட்ட திருத்தம் மற்றும் என்.ஆர்.சி.யை அமல்படுத்தப்போவது இல்லை என மமதா பானர்ஜி திட்டவட்டமாக கூறி வருகிறார். மேற்கு வங்கத்தில் இந்த இரண்டுக்கும் எதிராக தொடர் போராட்டங்கள் நடைபெற்றும் வருகின்றன.
ஜாதவ்பூர் பல்கலைக் கழக மாணவர்கள் ஆளுநருக்கு கறுப்புக் கொடி காட்டி அவரை பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கவிடாமல் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதேபோல் ஜாதவ்பூர் பல்கலைக் கழக மாணவி டேப்ஸ்மிதா சவுத்ரி என்பவர் குடியுரிமை சட்ட திருத்த நகலை கிழித்து எறிந்தார்.
இந்நிலையில் குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து முதல்வர் மமதா பானர்ஜி கொல்கத்தாவில் இன்று 5-வது பேரணியை நடத்தினார். இப்பேரணியில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
West Bengal Chief Minister Mamata Banerjee leads another protest march against #CitizenshipAmendmentAct and #NationalRegisterofCitizens, in Kolkata pic.twitter.com/342lz4dkgp
— ANI (@ANI) December 26, 2019
ஏற்கனவே அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைத்து குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக பிரமாண்ட போராட்டத்தை நடத்தவும் மமதா பானர்ஜி திட்டமிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மாணவர்களுக்கு அழைப்பு
கொல்கத்தாவில் இன்று நடைபெற்ற பேரணியில் பேசிய மமதா பானர்ஜி. குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக மாணவர்கள் போராட்டங்களை ஜனநாயக வழியில் தொடர வேண்டும். மாணவர்கள் போராட்டங்களை நடத்துவதற்கு ஜனநாயகத்தில் உரிமை உண்டு என்றார்.