கார் ஓட்டியபோது ஹெல்மெட் அணியவில்லை... 5 மாதங்களுக்குப் பிறகு நோட்டீஸ் அனுப்பிய சின்சியர் போலீஸ்!
கார் ஓட்டியவருக்கு ஹெல்மெட் அணியவில்லை என நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
Recommended Video
நாக்பூர்: மகாராஷ்டிர மாநிலத்தில் கார் ஓட்டிச் சென்றவர் ஹெல்மெட் அணியவில்லை என போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இருசக்கர வாகனங்களில் செல்வோரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, அவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என அறிவுறுத்தப் பட்டுள்ளது. இந்த சட்டத்தை மீறுபவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில் மகாராஷ்டிர மாநில கட்சித் தலைவர் ஒருவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் போக்குவரத்து போலீசார், இ-சலான் ஒன்றை அனுப்பி இருந்தனர். அதில் அவர்கள், சம்பந்தப்பட்ட வாகனத்தின் புகைப்படத்தை ஒட்டி, அதனை ஓட்டிச் சென்றபோது ஓட்டுநர் ஹெல்மெட் அணியவில்லை எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்காக சம்பந்தப்பட்ட நபருக்கு ரூ. 500 அபராதம் விதிப்பதாகவும், அதனை 15 தினங்களுக்குள் கட்டத் தவறினால் சட்டரீதியான நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் எனவும் எச்சரிக்கப்பட்டிருந்தது.
இந்த நோட்டீசால் சம்பந்தப்பட்ட நபர் அதிர்ச்சி அடைந்தார். காரணம் சம்பவத்தன்று அவர் ஓட்டிச் சென்றது இருசக்கர வாகனம் அல்ல, கார். சிசிடிவி கேமராக் காட்சிகளின் உதவியோடு போக்குவரத்து போலீசார் அனுப்பிய நோட்டீசில் இருந்த புகைப்படத்திலும் காரின் படமே இருந்தது.
[பாம்பை தோள் மீது போட்டு செல்பி எடுக்க முயற்சி... இளைஞர் பலி!]
இதன் மூலம், கார் ஓட்டிச் சென்ற நபர் ஹெல்மெட் அணியவில்லை என தவறுதலாக போலீசார் அபராத நோட்டீஸ் அனுப்பியது தெரிய வந்துள்ளது.
இதில் மற்றொரு காமெடி என்னவென்றால், சம்பவம் நடைபெற்றது இப்போதல்ல, கடந்த ஜூலை மாதம் முதல் தேதி. ஐந்து மாதங்களுக்குப் பிறகு அதுவும் தவறுதலாக நோட்டீஸ் அனுப்பிய போக்குவரத்து ஊழியர்களின் செயல் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.