மும்பை: மது அருந்த 7 வயது சிறுமியைக் கொன்று ரூ 20ஐ திருடிய கொடூரன் கைது
மும்பை: இருபது ரூபாய் பணத்தை திருடியதை நேரில் பார்த்த 7 வயது சிறுமியை நீரில் மூழ்கடித்துக் கொலை செய்த குற்றவாளியை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர்.
மும்பையின் செம்பூர் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் ஹஜ்ரா (30) சம்பவத்தன்று தனது மொபைல் போனிற்கு சார்ஜ் போடுவதற்காக பக்கத்து வீட்டிற்கு சென்றுள்ளார். அ\ங்கே 7 வயது சிறுமி சர்கார் மட்டும் இருந்துள்ளார். அவரது 10 வயது சகோதரன் வெளியே விளையாடிக் கொண்டிருந்துள்ளான்.
சார்ஜர் எடுக்க சிறுமி உள்ளே சென்ற சமயம், சிறுமியின் தந்தையின் மணிபர்ஸ் அங்கே கிடப்பதைக் கண்ட ஹஜ்ரா, அதிலிருந்து ரூ 20 ஐ திருடியுள்ளார். இதனை அச்சிறுமி பார்த்து விட்டாள். எங்கே வெளியில் சொன்னால் தான் மாட்டி விடுவோம் என அஞ்சிய ஹஜ்ரா, சிறுமியை தொட்டி நீரில் மூழ்கடித்துக் கொலை செய்து விட்டார்.
பின்னர், வீட்டின் கதவை வெளிப்புறமாகப் பூட்டிய ஹஜ்ரா தலைமறைவாகி விட்டார். சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு வந்த சர்காரின் தாயார் வீடு வெளிப்புறமாக தாழிடப் பட்டிருந்த்aதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்ற அவர் சர்காரை மீட்டு மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றுள்ளார். அங்கே சர்க்காரை சோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதை உறுதி செய்துள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சிறுமியின் சகோதரனிடம் நடத்திய விசாரணையில் ஹஜ்ரா வந்து சென்றது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து ஹஜ்ராவைக் கைது செய்த போலீசார் அவனிடம் நடத்திய விசாரணையில், மது அருந்துவதற்காக ரூ 20ஐ திருடியதாகவும், அதனை சர்கார் பார்த்து விட்டதால் அவரைக் கொலை செய்ததையும் ஒத்துக் கொண்டார்.
சிறுமி சர்காரின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையில் வைக்கப் பட்டுள்ளது. கொலை செய்வதற்கு முன்னதாக சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டாரா என்பது பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின்னர் தான் தெரிய வரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.