கர்நாடகாவில் 300 பாம்புகளை பிடித்தவர் பலி.. 301வது பாம்பை அஜாக்கிரதையாக பிடித்தபோது பரிதாபம்
யாதகிரி: கர்நாடக மாநிலத்தில் பாம்பு பிடிப்பவர், குடிபோதையில் பாம்பை பிடித்தபோது பாம்பு கடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
பாம்பு பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்த அந்த நபர் இதுவரை 300க்கும் மேற்பட்ட பாம்புகளை கிராமங்களில் பிடித்து பின்னர் வனச்சரகத்தில் விட்டுள்ளார்.
வழக்கம்போல் இந்த முறையும் பாம்பு பிடிக்கும்போது அது 5 முறை தொடர்ந்து கடித்ததால் பரிதாபமாக உயிரிழந்தார்.

பாம்பு பிடிக்கும் பசவராஜ்
கர்நாடக மாநிலம் யாதகிரி மாவட்டத்தில் உள்ள கொடிஹாலா கிராமத்தில் பசவராஜ் பூஜாரி என்பவர் பாம்பு பிடிக்கும் தொழில் செய்து வருகிறார். கொடிஹாலா மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களுக்குள் எங்கு பாம்பு வந்தாலும் இவரைத்தான் அழைப்பார்களாம். இவரும் உடனடியாக அங்கு சென்று பாம்புகளை லாவகமாக பிடித்து பின்னர் காடு, வனப்பகுதிகளில் விடுவது வழக்கம்.

அழையா விருந்தாளியாய் பாம்பு
இந்நிலையில் நேற்று முன்தினம் கொடிஹாலா கிராமத்தில் உள்ள ஒருவரின் வீட்டுக்குள் சுமார் ஐந்தரை அடி நீளமுள்ள விஷப்பாம்பு புகுந்துள்ளது. இதனால் பயந்து போன கிராம மக்கள் பசவராஜை அழைத்து வந்தனர். அப்போது அவர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. நிதானம் இன்றி இருந்த பசவராஜ் வழக்கம் போல் பாம்பை லாவகமாக பிடித்துள்ளார். ஆனால் பாம்பை எடுத்தவுடன் அதை காட்டுற்குள் விடுவதற்கு அவர் செல்லவில்லை.

கையை கடித்த பாம்பு
அதற்கு பதிலாக பாம்பை கையில் வைத்து வேடிக்கை பார்த்துள்ளார். அப்போது அந்த பாம்பு பசவராஜை 5 முறை கடித்துள்ளது. இதை அடுத்து பாம்பின் விஷம் அவரின் உடலில் ரத்தத்தில் கலக்க சரிந்து விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இதற்குக் காரணம் அவர் பாம்பை மிக இறுக்கமாக பிடித்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதனால் அவர் கையில் இருந்து எப்படியாவது விடுபட நினைத்து அவரது கையை கடித்து குதறி இருக்கலாம். பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பார்கள். அதெல்லாம் நடுங்காது என்பது போல் அசால்ட்டாக 300 விஷப் பாம்புகளை பிடித்த இவருக்கு அந்தப் பழமொழி பொருந்தாது என்றே சொல்லலாம். ஆனாலும் அலட்சியமாக இருந்ததால் பசவராஜ் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

பாம்பு கொட்டினால் என்ன செய்வது?
பாம்பு கடித்தால் உடனடியாக பாதிக்கப்பட்டவரை ஒருக்களித்து அல்லது குப்புற படுக்க வைக்க வேண்டும். பாம்பு கடிபட்டவர் பதட்டம் ஆகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கையில் கடித்திருந்தால் மோதிரம், வளையல்களையும், காலில் கடிபட்டிருந்தால் காலணிகளை அகற்ற வேண்டும். பாம்பு கடிபட்டவர் அருந்துவதற்கு எதையும் தரக்கூடாது. கடிபட்ட இடத்தை கீறவோ, வாய்வைத்து நஞ்சை உறிஞ்சி எடுக்கவோ முயற்சி செய்ய வேண்டாம். கடிபட்ட இடத்தில் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யலாம். கடி இடத்துக்கு மேலே ஒரு விரல் புகும் அளவுக்கு சாதாரண அழுத்தத்தில் துணியால் கட்ட வேண்டும். கடிபட்ட 45 நிமிட நேரத்திற்குள் விரைவாக மருத்துவமனைக்கு படுக்கை நிலையில் கொண்டு செல்ல வேண்டும்.












Click it and Unblock the Notifications