மணிப்பூர் தேர்தல்- நாளை முதல் கட்ட வாக்குப் பதிவு- பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதலில் 2 பேர் பலி
இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் நாளை முதல் கட்டமாக 38 சட்டசபை தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இந்த நிலையில் பயங்கரவாதிகள் நேற்று நடத்திய வெடிகுண்டு தாக்குதல்களில் 2 பேர் பலியாகி உள்ளது பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
60 சட்டசபை தொகுதிகளைக் கொண்டது மணிப்பூர். இம்மாநிலத்தில் நாளையும் மார்ச் 5-ந் தேதியும் 2 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

நாளை முதல் கட்ட தேர்தல்
மணிப்பூரின் 38 தொகுதிகளில் நாளை முதல் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தம் 173 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். முதல் கட்ட தேர்தலில் காங்கிரஸ் கட்சி 35 வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. இதில் 4 பேர் பெண்கள். பாஜகவில் 36 பேர் ஆண்கள், 2 பேர் பெண் வேட்பாளர்கள். நாகா மக்கள் கட்சி 24 ஆண்களையும் 3 பெண்களையும் வேட்பாளர்களாக நிறுத்தி உள்ளது.

பாஜகவுக்கு பயங்கரவாதிகள் ஆதரவு
மணிப்பூர் முதல் கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் நேற்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் நிறைவடைந்தது. இந்த நிலையில் மணிப்பூரில் தடை செய்யப்பட்ட பிரிவினைவாத இயக்கமாக குக்கிகள், பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளனர். இது வாக்காளர்களை அச்சுறுத்தும் செயல் என்று காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

வெடிகுண்டு தாக்குதல்
இதனிடையே சனிக்கிழமை இரவு சூரத்சந்த்பூர் மாவட்டத்தில் பயங்கரவாதிகளின் வெடிகுண்டு தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட 2 பேர் கொல்லப்பட்டனர். 5 பேர் படுகாயமடைந்தனர். மேலும் இந்த தாக்குதலில் படுகாயமடைந்துள்ளனர். மணிப்பூர் சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்புக்குப் பிந்தைய முதலாவது வெடிகுண்டு தாக்குதல் இது.

மக்களிடையே பதற்றம்
ஏற்கனவே பிரதமர் மோடி மணிப்பூர் மாநிலத்துக்கு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்க வந்த போதும் தேர்தல் பிரசாரத்தின் போதும் பயங்கரவாதிகள் கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் பிரதமர் மோடியின் வருகைக்கு எதிராக முழு அடைப்புக்கும் பயங்கரவாதிகள் கூட்டமைப்பு அழைப்பு விடுத்திருந்தது. தற்போது வெடிகுண்டு தாக்குதல்களை நடத்த தொடங்கி இருப்பது அம்மாநிலத்தில் பதற்றத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. 2-ம் கட்ட தேர்தல் மார்ச் 5-ந் தேதி நடைபெறும். மார்ச் 1-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.












Click it and Unblock the Notifications