நிர்வாண ஊர்வல வீடியோ.. வைரலாக்கியது யார்? மணிப்பூர் பெண்ணின் கணவரான மாஜி ராணுவ வீரர் உருக்கம்!
இம்பால்: மணிப்பூர் வன்முறையில் பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து சென்ற வீடியோ வெளியாகி நாட்டையை உலுக்கி உள்ளது. இத்தகைய சூழலில் தான் அந்த வீடியோ வைரலானது எப்படி? என்பது பற்றி பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவரான மாஜி ராணுவ வீரர் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
மணிப்பூர் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக பீரன் சிங் உள்ளார். வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கின்றனர். இங்கு பழங்குடியினர் பிரிவில் குக்கி இன மக்கள் உள்ளனர். இந்நிலையில் தான் பழங்குடியினர் பட்டியில் இணைக்க மைத்தேயி பிரிவினர் கூறி வருகின்றனர்.

ஆனால் மைத்தேயி மக்களை பழங்குடியினர் பட்டியலில் இணைக்க குக்கி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதுதொடர்பாக கடந்த மே மாதம் 3ம் தேதி இருபிரிவினர் இடையே கடும் மோதல் ஏற்பட்டு வன்முறை வெடித்தது. இந்த வன்முறை இன்னும் அடங்கவில்லை.
இதனால் மணிப்பூரில் கடந்த இரண்டரை மாதமாக பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதற்கிடையே தான் நேற்று முன்தினம் அதிர்ச்சி வீடியோ ஒன்று வெளியானது. அதாவது மணிப்பூரில் குக்கி இனத்தை சேர்ந்த 2 பழங்குடியின மக்களை ஒரு கும்பல் நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து செல்லும் காட்சிகளுடன் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஒட்டுமொத்த இந்தியாவையும் இந்த வீடியோ உலுக்கி உள்ளது.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 7 பேரை கைது செய்தனர். இதற்கிடையே தான் இந்த வழக்கு விசாரணை சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சிபிஐ விரைவில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த துயர சம்பவம் மணிப்பூரில் வன்முறை தொடங்கிய மறுநாளான மே 4ம் தேதி நடந்த நிலையில் ஜூலை 19 ல் வீடியோவாக வெளியான பிறகே அதுபற்றி வெளியுலகிற்கு தெரியவந்தது.
இப்படி சித்ரவதைக்கு உள்ளான 2 பெண்களில் ஒருவர் இந்தியாவின் முன்னாள் ராணுவ வீரரின் மனைவி ஆவார். அவர் பாகிஸ்தான் உடனான கார்கில் போரில் நாட்டை காக்கும் வகையில் எல்லையில் சேவையாற்றினார். தற்போது இவருக்கு 65 வயது ஆகிறது. தனது 18 வயதில் அசாம் படைப்பிரிவில் சிப்பாயாக பணிக்கு சேர்ந்த இவர் 2000ல் சுபேதார் அந்தஸ்தில் ஓய்வு பெற்றார். சுமார் 30 ஆண்டு ராணுவத்தில் பணியாற்றினார். இந்த சமயத்தில் நாட்டுக்கு உள்ளேயும், வெளியேயும் அவர் பல்வேறு முக்கிய ராணுவ நடவடிக்கையில் செயல்பட்டார்.
ஜம்மு காஷ்மீரில் ஆபரேஷன் ரக்சாக் எனும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை, அசாம், பஞ்சாப், ஜம்மு காஷ்மீர் முழுவதும் ஆபரேஷன் ரினோ ராணுவ நடவடிக்கை, இலங்கை உள்நாட்டு போர் உள்ளிட்டவற்றில் பங்கெடுத்துள்ளார். இவர் சைன்ய சேவா பதக்கம், ஒப் விஜய் பதக்கம், விதேஷ் சேவா பதக்கம் உள்பட பல்வேறு பெற்றுள்ளார். இந்நிலையில் தான் மணிப்பூர் வன்முறை, தனது மனைவி உள்பட பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமை பற்றி முன்னாள் ராணுவவீரர் மனக்குமுறலை வெளிப்படுத்தி உள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது:
இந்த சம்பவம் மிகவும் வேதனைக்குரியது. இதில் இருந்து எங்களால் மீண்டு வர முடியவில்லை. தற்போது வரை அரசு அல்லது போலீசார் எங்களை தொடர்பு கொள்ளவில்லை. இந்த சம்பவத்தில் போலீசார் இதற்கு முன்பே நடவடிக்கை எடுத்து இருக்க வேண்டும். ஆனால் வன்கொடுமை வீடியோவாக வெளியாகும் வரை அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை.
அதோடு மணிப்பூரில் என்ன நடக்கிறது? என்பதையும் யாரும் பெரிதாக கண்டுக்கொள்ளவில்லை. வீடியோ வெளியான பிறகே இங்கு நாங்கள் படும் துன்பத்தை மற்றவர்கள் அறிந்துள்ளனர். மணிப்பூர் நிலைமையை வெளியுலகிற்கு தெரியப்படுத்தும் வகையில் அந்த வீடியோவை கடவுள் தான் வைரலாக்கி உள்ளார் என நினைக்கிறேன். இந்த சம்பவம் நடந்ததில் இருந்து நான் பணியாற்றிய பிரிவின் அதிகாரிகள், முன்னாள் ராணுவ வீரர்கள் சங்கத்தில் இருந்து என்னை தொடர்பு கொண்டு பேசினர்'' என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications