இந்தியாவில் 3 நாள் பயணம்.. சோனியா, மன்மோகனை சந்தித்தார் இலங்கை பிரதமர் ரணில்
டெல்லி: இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே 3 நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியாவுக்கு நேற்று வருகை தந்தார்.
பாகிஸ்தானில் நடைபெறவிருந்த தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு (சார்க்) மாநாட்டில் கலந்து கொள்ளப்போவதில்லை என்று இந்தியா கடந்த வாரம் முடிவெடுத்தது. இதையடுத்து ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பூடான், இலங்கை ஆகிய சார்க் உறுப்பு நாடுகளும் மாநாட்டை புறக்கணிப்பதாக அறிவித்தன. இதனால் சார்க் மாநாட்டை ஒத்திவைக்க வேண்டிய நிலை பாகிஸ்தானுக்கு ஏற்பட்டது. இந்த சூழ்நிலையில் இலங்கைப் பிரதமரின் இந்தியப் பயணம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் இன்று வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலை, கப்பல் துறை அமைச்சர் நிதின் கட்கரி, பெட்ரோலியம், இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோரை ரணில் விக்கிரமசிங்கே இன்று சந்தித்துப் பேசுகிறார். இன்று மாலையில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை அவர் சந்திக்கிறார். தொடர்ந்து இந்தியப் பொருளாதார உச்சி மாநாட்டில் வியாழக்கிழமை பங்கேற்கும் அவர் அன்று மாலையே இலங்கை திரும்புகிறார்.
முன்னதாக டெல்லியில் இன்று காலை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோரை ரணில் விக்ரமசிங்கே மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
ரணிலுடன் அவரது மனைவி மைத்திரி விக்கிரமசிங்ேக, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, சர்வதேச வர்த்தகத் துறை அமைச்சர் மலிக் சமரவிக்கிரம, தொலைத் தொடர்பு அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ, பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, மேலதிகச் செயலாளர் சமன் அதாவுடஹெட்டி, ஐந்தாண்டுத் திட்ட செயலாளர் அர்ஜுன மகேந்திரன், பிரதமரின் சிறப்பு உதவியாளர் சென்றா பெரேரா, வெளியுறவுத்துறை அமைச்சரின் தனி செயலாளர் லக்ஷ்மி ஜெகநாதன் உள்ளிட்டோர் உடன் வந்துள்ளனர்.