ஏடிஎம்களில் பணத்தட்டுப்பாடு... பல்வேறு மாநிலங்களில் மக்கள் திண்டாட்டம்
பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு மீண்டும் ஏடிஎம்களில் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் சமூக வலைதளங்களில் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
Recommended Video
டெல்லி : நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ரூபாய் நோட்டுகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் வங்கி ஏடிஎம்களில் பணம் எடுக்க முடியாமல் மக்கள் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது ஏடிஎம்களை தேடி அலைந்தது போல தற்போது பணம் எடுப்பதற்காக தேடி அலைவதாக சமூக வலைதளங்களில் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
உயர் ரூபாய் நோட்டுகளான ரூ. 500 மற்றும் ரூ. 1000 நோட்டுகள் மதிப்பிழப்பதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்ததால் திடீரென நாடு முழுவதும் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டது. பணப்புழக்கம் இல்லாததால் ஏடிஎம்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து மக்கள் கட்டுப்பாடுகளுடன் பணத்தை எடுத்துச் செல்லும் நிலை ஏற்பட்டது.
புதிய ரூபாய் நோட்டான ரூ. 2000 அச்சிடப்படாமல் அவசரகதியில் எடுக்கப்பட்ட நடவடிக்கையே மக்கள் அவதியடையக் காரணம் என்று குற்றம்சாட்டப்பட்டது. இந்நிலையில் மீண்டும் ஏடிஎம்களில் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ரிசர்வ் வங்கியிடம் இருந்து போதிய பணம் கிடைக்காததால் குஜராத் ஏடிஎம்களில் பணம் கிடைக்கவில்லை என்று மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
|
பணத்தட்டுப்பாடு
உஞ்சா, ஜாம்நகர், சூரத், நவ்சரி, வதோதரா உள்ளிட்ட பல்வேறு வங்கிகள் மற்றும் ஏடிஎம்களில் பணம் கிடைக்கவில்லை என்று விவசாயிகளும், வியாபாரிகளும் தெரிவித்துள்ளனர். டெல்லி, பெங்களூரு உள்ளிட்ட பெருநகரங்களிலும் ஏடிஎம்களில் பணம் கிடைக்கவில்லை என்று நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர். ஆந்திரா, தெலங்கானாவிலும் ஏடிஎம்களில் பணம் கிடைக்கவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
|
ஏடிஎம்மில் பணமில்லை
இதே போன்று மத்திய பிரதேச மாநிலம் போபாலிலும் பல்வேறு ஏடிஎம்களில் பணம் கிடைக்கவில்லை என்று மக்கள் கூறியுள்ளனர். ரிசர்வ் வங்கியிடம் இருந்து போதுமான பணம் கிடைக்காததோடு, ரூ. 2000 நோட்டுகளும் அதிக அளவில் வழங்கப்படாததே தட்டுப்பாட்டிற்குக் காரணம் என்று வங்கியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தட்டுப்பாடு ஏன்?
ரிசர்வ் வங்கி போதிய அளவுக்கு 2,000 ரூபாய் நோட்டுகளை வழங்காததால், வங்கிகளில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது உண்மை தான் என்று அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் பொதுச்செயலர், தாமஸ் பிராங்கோ தெரிவித்துள்ளார். சென்னையில், நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் : வங்கிகளின் வாரா கடன், ஒன்பது லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. அதில், 88 சதவீதம், 'கார்ப்பரேட்' நிறுவனங்கள் வாங்கியவை. அந்த கடனை வசூலிக்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.வாரா கடன் தொடர்பாக, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள சுற்றறிக்கை, இந்திய பொருளாதாரம் மற்றும் நிதி நிலைமையை, ஆபத்திற்கு அழைத்து செல்வதாக உள்ளது.
நெருக்கடி நிலையில் வங்கிகள்
ரிசர்வ் வங்கி, போதிய அளவுக்கு, 2,000 ரூபாய் நோட்டுகள் விநியோகம் செய்வதில்லை. இதனால், வங்கிகளுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. வங்கிகளில் இருந்து எடுத்த, 2,000 ரூபாய் நோட்டுகளை, வாடிக்கையாளர்கள், தட்டுப்பாடு காரணமாக, வீடுகளில் பத்திரப்படுத்தி விடுகின்றனர் என்றும் அவர் கூறியுள்ளார்.
தமிழகத்திலும் வரக்கூடும்
சென்னையை பொருத்தவரை ஏடிஎம்களில் புதிய ரூ. 2000 நோட்டுகள் கிடைக்கவில்லை. ரூ. 500 மற்றும் ரூ. 100 தாள்களே ஏடிஎம்களில் இருந்து பெறப்படுகிறது, இதனால் விரைவில் தமிழக வங்கி, ஏடிஎம்களிலும் பணத்தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக வங்கியாளர்கள் எச்சரிக்கின்றனர்.