நேற்று ஜார்க்கண்ட் இன்று மகாராஷ்டிரா: போலீசார் மீது மாவோயிஸ்டுகள் சரமாரி துப்பாக்கிச் சூடு- பதற்றம்!
கட்சிரோலி: மகாராஷ்டிரா மாநிலம் கட்சிரோலி வனப்பகுதியில் போலீசார் மீது மாவோயிஸ்டுகள் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனையடுத்து கட்சிரோலி வனப்பகுதியில் போலீசார் தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டனர். இந்த நடவடிக்கையின் போது மாவோயிஸ்டுகளின் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்தியாவில் மாவோயிஸ்டுகளின் இடதுசாரி பயங்கரவாதம் பாதித்த மாநிலங்களில் மகாராஷ்டிராவும் ஒன்று. மகாராஷ்டிராவின் கட்சிரோலி வனப்பகுதி மாவோயிஸ்டுகளின் முக்கிய பகுதியாகும்.
கட்சிரோலி பகுதியில் விவசாயம் பிரதான தொழிலாக இருந்தது. அப்பகுதியில் இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி இருந்தனர். இதனால் மாவோயிஸ்டுகள் எளிதாக ஊடுருவ முடிந்தது. இதுவே கட்சிரோலி, மாவோயிஸ்டுகளின் கோட்டையாகவும் உருமாற தொடங்கியது. அப்பகுதியில் சூரஜ்கார் சுரங்க திட்டத்தை மாவோயிஸ்டுகள் கடுமையாக எதிர்த்தனர். இந்த சுரங்க பணிக்காக வந்த டிரக்குகளை தீ வைத்து எரித்தனர் மாவோயிஸ்டுகள். ஆனால் மாவோயிஸ்டுகளுக்கு எதிராக, வளர்ச்சி நடவடிக்கைகளை அரசு தரப்பு மேற்கொண்டது.
இதனால் கட்சிரோலி பகுதி இளைஞர்கள் பெரும் எண்ணிக்கையில் வேலைவாய்ப்புகளைப் பெற்றனர். அப்பகுதியில் 3000க்கும் அதிகமான இளைஞர்கள் சுரங்க பாதுகாப்பு பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர், 1,000க்கும் மேற்பட்டோர் இருசக்கர வாகனங்களைப் பயன்படுத்தும் அளவுக்கு முன்னேறி இருக்கின்றனர். இதனால் மாவோயிஸ்டுகளின் பிடியில் இருந்து இளைஞர்கள் விடுபட்டிருக்கின்றனர்.
இதனிடையே கட்சிரோலி வனப்பகுதியில் போலீசார் மீது திடீரென மாவோயிஸ்டுகள் கூட்டமாக தாக்குதல் நடத்தினர். இதற்கு போலீசார் தரப்பில் பதிலடி தரப்பட்டது. இதனையடுத்து வனப்பகுதிக்குள் மாவோயிஸ்டுகள் தப்பி ஓடி பதுங்கினர். அப்பகுதியில் மாவோயிஸ்டுகள் விட்டு சென்ற ஆயுதங்கள் உள்ளிட்டவைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சில நாட்களுக்கு முன்னர் ஜார்க்கண்ட் மாநிலத்தில் சிஆர்பிஎப் ஜவான்கள் மீது மாவோயிஸ்டுகள் கடும் தாக்குதல் நடத்தினர். இதி 5 பாதுகாப்பு படையினர் படுகாயமடைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மாவோயிஸ்டுகள் வெறிச்செயல்- சிஆர்பிஎப் ஜவான்கள் மீது சரமாரி துப்பாக்கி சூடு-5 வீரர்கள் படுகாயம்