வக்பு வாரிய சட்ட திருத்தத்துக்கு எதிரான போராட்டம் விஸ்வரூபம்-முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் அறிவிப்பு
டெல்லி: மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் சர்ச்சைக்குரிய வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக நாடு தழுவிய அளவில் போராட்டங்களை அனைத்திந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் அறிவித்துள்ளது. இந்தப் போராட்டங்களின் ஒரு பகுதியாக பீகார் மாநிலம் பாட்னா சட்டசபை முன்பாக நாளை மறுநாள், விஜயவாடாவில் வரும் 29-ந் தேதி போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் முஸ்லிம்களின் பல்வேறு சொத்துகளை நிர்வகிக்கும் அமைப்பாக வக்பு வாரியம் செயல்பட்டு வருகிறது. வக்பு வாரிய சொத்துகளை நிர்வகிப்பதற்கான சட்டங்கள் ஏற்கனவே அமலில் உள்ளன.

இந்த நிலையில் மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, நடைமுறையில் உள்ள வக்பு வாரிய சட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்டு புதிய மசோதாவை தாக்கல் செய்தது. இந்த மசோதாவுக்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் நாடாளுமன்ற நிலைக்குழுவில் வக்பு வாரிய மசோதா மீதான எதிர்க்கட்சிகளின் அனைத்து திருத்தங்களும் நிராகரிக்கப்பட்டன. இதனையடுத்து வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா அதிகாரபூர்வமாக லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக நாடு முழுவதும் முஸ்லிம்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தினர். தற்போது அனைத்திந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியமும் போராட்டங்களை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அனைத்திந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரிய செய்தித் தொடர்பாளர் இலியாஸ் தெரிவிக்கையில், மத்திய பாஜக அரசின் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக பீகார் மாநிலம் பாட்னா சட்டசபை முன்பாக வரும் 26-ந் தேதி போராட்டம் நடத்தப்படும்; இதனைத் தொடர்ந்து ஆந்திராவின் விஜயவாடாவில் வரும் 29-ந் தேதி போராட்டம் நடத்தப்படும் என்றார்.
பீகாரின் ஜேடியூ, ஆந்திராவின் தெலுங்குதேசம் கட்சிகள் ஆதரவில்தான் மத்தியில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. இதனால் இந்த இரு கட்சிகளும் ஆட்சி செய்யும் மாநிலங்களில் முஸ்லிம்கள் தனிநபர் சட்ட வாரியம் போராட்டங்களை அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications