உம்மன் சாண்டியை சந்தித்தார் வைகோ... நியூட்ரினோ ஆய்வு திட்டத்தை தடுக்க கோரிக்கை
கொச்சி: தேனி மாவட்டத்தில் அமைய உள்ள நியூட்ரினோ ஆய்வு திட்டத்தை தடுக்க வலியுறுத்தியும், செண்பகவல்லி தடுப்பணையை பழுது பார்க்க கோரியும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கேரளா முதல்வர் உம்மன் சாண்டியை சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளார்.
தமிழகத்தில் தேனி மாவட்டத்தில் மத்திய அரசு அமைக்க உள்ள நியூட்ரினோ ஆய்வு மையத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, கேரள முதல்வரின் ஆதரவை பெறுவதற்காக கேரளா சென்றார்.
முதல்வர் உம்மன்சாண்டியை வைகோ சந்தித்து பேசினார். அப்போது அவர், தேனி மாவட்டம் பொட்டிபுரத்தில் மத்திய அரசு அமைக்க இருக்கின்ற நியூட்ரினோ ஆராய்ச்சி மையம் இடுக்கி மாவட்டத்திற்கு, குறிப்பாக இடுக்கி அணைக்கு பேராபத்தை ஏற்படுத்தும்.

கேரளாவில் இடுக்கி அணை உள்ளிட்ட 21 அணைகளுக்கும், ஏலக்காய் தோட்டங்களில் அமைந்துள்ள பனிரெண்டாயிரம் தடுப்பணைகளுக்கும் தமிழ்நாட்டில் உள்ள முல்லைப் பெரியாறு அணைக்கும் நியூட்ரினோ திட்டத்தால் பெரும் ஆபத்து ஏற்படும் என்று கூறினார்.
பசுமை நிறைந்த மேற்கு தொடர்ச்சி மலைகள் பாதிக்கப்படும். நியூட்ரினோ அமைக்கும் சுரங்கங்களில் அணுக்கழிவுகள் கொட்டுவதற்கும் திட்டமிட்டுள்ளனர். இத்தாலியில் அமைந்துள்ள நியூட்ரினோ திட்டத்திற்கு பேரெதிர்ப்பு ஏற்பட்டுள்ளது.
மத்தியில் ஆளும் நரேந்திர மோடி அரசு 1500 கோடியை இத்திட்டத்திற்கு ஒதுக்கியுள்ளது. இத்திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஒப்புதல் கொடுக்கவில்லை. எனவே கேரள அரசும், மக்களும் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டுகிறேன் என்று கூறி முதல்வரிடம் கோரிக்கை மனுவை வைகோ கொடுத்தார்.
அதற்கு கேரள முதல்வர் உம்மன்சாண்டி,ஏற்கெனவே மார்க்சிஸ்ட் தலைவர் அச்சுதானந்தன் நியூட்ரினோ திட்டத்தை தொடக்கத்தில் இருந்து எதிர்த்து வருகிறார். இது குறித்து கேரள அரசு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆதரவைக் கேட்பேன். மக்கள் நலனுக்கு தேவையானதை எங்கள் அரசு செய்யும் என உறுதியளித்தார். முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் அவர்களையும் இதுகுறித்து சந்திக்க இருக்கிறேன் என்று வைகோ அப்போது கூறினார்.

செண்பகவல்லி தடுப்பணை
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் சிவகிரி பகுதி விவசாயிகளுக்கு வாழ்வளித்து வந்த செண்பகவல்லி தடுப்பணை கேரள மாநில எல்லைக்குள் இருக்கிறது. 1733 ஆம் ஆண்டு இது கட்டப்பட்டது. 1955 இல் இதில் பழுது ஏற்பட்டபோது அன்றைய முதல்வர் காமராசர் அவர்கள் முயற்சியால், கேரள அரசு செப்பனிட்டுத் தந்தது. அதற்கான செலவை 3,25,000 தொகையை தமிழக அரசு செலுத்தியது.
1965 இல் மீண்டும் பழுது ஏற்பட்டது. இதை செப்பனிடுவதற்காக இரண்டு அரசுகளுக்கும் இடையே கடிதப் போக்குவரத்து நீடித்து வந்தது. கடைசியாக 1986 இல் 10,29,752 ரூபாயை கேரள அரசு மதிப்பீடு செய்தது. அதில் பாதித்தொகை 5,15,000 ரூபாயை கேரள அரசுக்கு தமிழக அரசு செலுத்தியது. ஆனால் பழுதுபார்க்கப்படவில்லை.

2005 ஆம் ஆண்டு பிப்ரவரி 9 ஆம் தேதி கேரள அரசின் தலைமைச் செயலகத்தில் உங்களை சந்தித்து 5 கோரிக்கைகளை முன்வைத்தேன். மற்ற நான்கு கோரிக்கைகளை ஏற்க முடியாவிடிலும் செண்பகவல்லி தடுப்பணை பழுதுபார்க்கப்படும் என்று உறுதியளித்தீர்கள். அதற்கு நன்றியும் தெரிவித்தேன். ஆனால் இன்னும் வேலை நடக்காமல் இருக்கிறது.
2006 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு செலுத்திய பணத்தை கேரள அரசு திருப்பி அனுப்பிவிட்டது என்று கூறியபோது, கேரள முதல்வர் உம்மன்சாண்டி அவர்கள், தேர்தல் வந்தது, ஆட்சி மாற்றம் ஏற்பட்டது, அதனால் செய்ய முடியாமல் போனது என்றார். செண்பகவல்லி தடுப்பணை பழுதுபார்க்கும் வேலையை அனுதாபத்துடன் கவனிப்பதாக முதலமைச்சர் உம்மன்சாண்டி வைகோவிடம் உறுதி கூறினார்.












Click it and Unblock the Notifications