மனரீதியாக துன்புறுத்தினாலும் விவாகரத்து நிச்சயம்- உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
டெல்லி: கணவன் மற்றும் மனைவி மனரீதியாக கொடுமையை அனுபவித்தாலும், சம்பந்தப்பட்டவர்களுக்கு விவாகரத்து வழங்கப்படலாம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பெங்களூரைச் சேர்ந்த ஒரு மருத்துவ தம்பதி விவாகரத்து கோரி மனு செய்திருந்தனர். அவர்களுக்கு முகோபாத்யாய் மற்றும் தீபக் மிஸ்ரா அடங்கிய டிவிஷன் பெஞ்ச் விவாகரத்து வழங்கி உத்தரவிட்டது.
மன ரீதியான சித்திரவதையை காரணம் காட்டி இந்த விவாகரத்தை பெஞ்ச் வழங்கியது.
அப்போது நீதிபதிகள் கருத்து தெரிவிக்கையில், மனம் மற்றும் உள ரீதியான கொடுமைகளை மனைவி கணவனுக்கு செய்தாலும், கணவன் மனைவிக்கு செய்தாலும் அது அளவிட இயலாத கொடுமை ஆகும். இது சமூகத்திற்கு சமூகம் மாறுபடும் அது, தனிநபரைப் பொறுத்தும் வேறுபடும்.
இந்த வழக்கில், கணவர் மீது அவதூறு குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டுள்ளதோடு, அவரை அவமானமும்படுத்தி உள்ளனர். அத்துடன், அவரின் உறவினர்கள் இருவருக்கும் இடையே சண்டையை பெரிதுபடுத்தி உள்ளனர். இதையெல்லாம், கொடுமையாகவே கருத முடியும். அதனால், அந்த அடிப்படையில் விவாகரத்து வழங்கப்படுகின்றது என்று தீர்ப்பில் கூறியுள்ளனர்.