கங்கையில் ஆரத்தி வழிபாடு நடத்தப்போவதில்லை: மோடி அறிவிப்பு
அகமதாபாத்: வாரணாசியில் கங்கை நதியில் ஆரத்தி வழிபாடு நடத்த அனுமதி கிடைத்த போது வழிபாடு நடத்தப் போவதில்லை என்று பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தலில் குஜராத்தின் வதோதரா மற்றும் உத்தரப்பிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் நரேந்திர மோடி போட்டியிடுகிறார். வாரணாசி தொகுதியில் இன்று இரண்டு இடங்களில் பிரசாரம் நடத்த மோடி தரப்பில் அனுமதி கோரப்பட்டிருந்தது.
ஆனால் இந்த பொதுக்கூட்டங்களை நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்தது. மேலும் கங்கை நதிக்கு நரேந்திர மோடி ஆரத்தி வழிபாடு நடத்தவும் மோடிக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதியளிக்கவில்லை.
இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் பாரதிய ஜனதா கட்சி புகார் கொடுத்தது. தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிராக பாஜகவினர் இன்று போராட்டம் நடத்தப் போவதாகவும் அறிவித்தனர். இதைத் தொடர்ந்து கங்கை நதிக்கான ஆரத்தி வழிபாட்டில் மட்டும் மோடி கலந்து கொள்ள அனுமதி கொடுக்கப்பட்டது.
இருப்பினும் இன்று காலை தமது ட்விட்டர் பக்கத்தில், தேர்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்படவில்லை. பாரதிய ஜனதா தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும். நமது சத்தியாகிரகப் போராட்டத்தால் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படக் கூடாது. கங்கையில் இன்று ஆரத்தி வழிபாடு நடத்த முடியாமல் போவதற்காக கங்கை மாதாவிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். அரசியலுக்கு அப்பாற்பட்டது அம்மாவின் பாசம் என்பதை இவர்கள் உணர்ந்து கொள்ளட்டும் என்று மோடி கூறியுள்ளார்.
இதனால் வாரணாசி புறநகரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் மட்டும் இன்று மோடி பங்கேற்க உள்ளார் என்று பாஜகவினர் தெரிவித்துள்ளனர்.