முண்டே மரணம் காரணமாக செயலாளர்களுடனான சந்திப்பை ஒத்திவைத்தார் மோடி
டெல்லி: மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டே சாலை விபத்தில் மரணமடைந்ததைத் தொடர்ந்து அமைச்சக செயலாளர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நடத்தவிருந்த ஆலோசனை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
16வது லோக்சபாவுக்கு நடைபெற்ற தேர்தலில் அபார வெற்றி பெற்ற பாரதிய ஜனதா, மத்தியில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது.
பிரதமராக பதவியேற்ற நரேந்திர மோடி. நாட்டில் ஒருங்கிணைந்த வளர்ச்சியை ஏற்படுத்துவதற்காக பத்து அம்ச திட்டம் ஒன்றை தயாரித்தார். தமது தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்கள் அனைவரும் இந்த பத்து அம்சதிட்டம் குறித்து நூறு நாள் செயல்திட்டம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.
இது குறித்து நேற்று பல்வேறு துறை அமைச்சகங்களின் செயலாளர்களை சந்தித்து ஆலோசனை செய்வதற்கு திட்டமிட்டிருந்தார் மோடி.
ஆனால் எதிர்பாராத வகையில், நேற்று காலை டெல்லியில் நடந்த சாலை விபத்தில் மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கோபிநாத் முண்டே காலமானார்.
முண்டே மரணம் எதிரொலியாக நேற்று நடக்க இருந்த செயலாளர்களின் சந்திப்பினை பிரதமர் மோடி ஒத்தி வைத்தார். இந்தச் சந்திப்புக்கான புதிய தேதி எதுவும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.