லோக் ஆயுக்தா சட்டம் அமலுக்கு வந்தால் நரேந்திர மோடி சிறை செல்வது உறுதி: ராகுல் காந்தி
அலகாபாத்: குஜராத் மாநிலத்தில் லோக் ஆயுக்தா சட்டம் அமலுக்கு வந்தால் நரேந்திர மோடி சிறை செல்வது உறுதி என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.
தகவல் அறியும் உரிமை சட்டம், லோக் ஆயுக்தா ஆகியவைகளைப் பார்த்து மோடி அஞ்சுகிறார் என்றும் அவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
உத்திரபிரதேச மாநிலம் அலகாபாத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட அவர் பேசியதாவது:
தடுக்க முயற்சித்த மோடி
''குஜராத் மாநிலத்தில் தகவல் அறியும் உரிமை சட்டம் வராமல் தடுக்க பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி முயற்சித்தார்.
கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வரை குஜராத்தில் தகவல் அறியும் உரிமை சட்டத்திற்கு என்று தனி ஆணையர் நியமிக்கப்படவில்லை.
மோடி சிறை செல்வார்
குஜராத் மாநிலத்தில் லோக் ஆயுக்தா சட்டம் அமலுக்கு வரும். அப்படி வரும் பட்சத்தில் நரேந்திர மோடி சிறை செல்வது உறுதி. பாரதிய ஜனதா கட்சி, மக்களிடையே வெறுப்புணர்வை விதைக்கிறது.
திட்டமிட்ட கலவரம்
முசாபர்நகர் கலவரத்தில் இரு தரப்பு மக்களிடையே திட்டமிட்டு பா.ஜ.க. மோதலை உருவாக்கியது. காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்களில் தான் வேலை வாய்ப்பு அதிகம் உருவாக்கப்பட்டு வருகிறது" என்று பேசினார்.
ஏழைகளின் பணம்
முன்னதாக கோன்டாவில் நடைபெற்ற பிரசாரத்தில் பேசிய ராகுல்காந்தி, நரேந்திர மோடியின் பிரசாரத்திற்கு தேர்தல் ஏழைகளின் பணம் தான் பயன்படுத்தப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.