கவனம் செலுத்த வேண்டிய மூன்று விவகாரங்கள்: அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவு
டெல்லி: நாட்டின் பிரதமராக பொறுப்பேற்று ஒரு மாதம் நிறைவடைகிற நிலையில் நல்ல நிர்வாகத்தை வெளிப்படுத்த 3 முக்கிய விவகாரங்களில் கவனம் செலுத்துவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார்.
பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்று ஒரு மாதம் முடிவடைய உள்ளது. அதற்குள் டீசல் விலை உயர்வு, இந்தி மொழி திணிப்பு, ரயில் கட்டண உயர்வு, சமையல் எரிவாயு விலை உயர்வு என அடுத்தடுத்த விமர்சனங்களை மோடி அரசு எதிர்கொண்டு வருகிறது.

3 விஷயங்களுக்கு முன்னுரிமை
இவற்றுக்கு அப்பால் நல்ல நிர்வாகத்தை வெளிப்படுத்தி மக்களின் நன்மதிப்பைப் பெற வேண்டுமெனில் உடனடியாக 3 விஷயங்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பது மோடியின் புதிய வழிகாட்டுதலாகும்.

மாநில உறவுகள்
மத்திய- மாநில அரசுகளிடையேயான உறவை மேம்படுத்தும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது மோடியின் முதன்மையான உத்தரவுகளில் ஒன்று. லோக்சபா தேர்தலின் போது கூட்டாட்சியை வலுப்படுத்துவேன் என்று மோடி கூறியிருந்தார். இதனை நடைமுறைப்படுத்தும் வகையில் இந்த அறிவுரை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறைகளைதல்
அதைத் தொடர்ந்து பொதுமக்களின் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுதல் என்பதாகும். அதாவது விமானம், ரயில் டிக்கெட், பயணங்கள், தொலைத் தொடர்புத் துறை, வங்கி நிர்வாகம், சுகாதாரம்,. பென்சன் ஆகியவை குறித்த பொதுமக்களின் புகார்களின் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுதல்.

சிறப்பு கண்காணிப்பு
இது தொடர்பான துறைகளின் இணையதளங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பொதுமக்கள் தெரிவிக்கும் பிரச்சனைகள் குறித்து கவனம் செலுத்தி அவற்றைப் போக்குதல் அவசியம் என்றும் மோடி கூறியுள்ளார். அத்துடன் இப் பிரச்னைகள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை கண்காணிக்க பிரதமர் அலுவலகத்தில் சிறப்பு குழுவும் கூட அமைக்கப்பட்டுள்ளது.

ராணுவ தளவாடங்கள்
ராணுவத்தினருக்கு தேவையான ஆயுதங்கள் விரைவாக கிடைப்பதில்லை என்பது நீண்டகால புகார். இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சர் அருண் ஜேட்லி மற்றும் முப்படை தளபதிகளுடன் மோடி ஆலோசனை நடத்தியுள்ளார். இதைத் தொடர்ந்து ராணுவத்தினருக்கு தேவையான ஆயுதங்கள் குறித்து வரிசைப்படுத்தி பட்டியல் வழங்கும்படி முப்படைகளும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. முப்படைகளை நவீனப்படுத்த, மத்திய அரசு ஒதுக்கும் நிதியை எப்படியெல்லாம் செலவழிப்பது என்பது குறித்தும் அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications