குஜராத் தேர்தலில் தோற்கப்போவதை அறிந்தே ஜிஎஸ்டி வரி குறைப்பு.. பாஜகவை விளாசும் கூட்டணி கட்சி சிவசேனை
மும்பை: குஜராத் தேர்தலில் படுதோல்வியை தவிர்க்கவே ஜிஎஸ்டி வரியை பாஜக குறைத்துள்ளது என்று சிவசேனை கட்சி விமர்சனம் செய்துள்ளார்.
சமீபத்தில் கவுகாத்தியில் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் 178 பொருட்கள் மீதான வரி, 28 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டது. இதற்கு பாராட்டுக்கள் கிடைத்த போதிலும், குஜராத் சட்டசபை தேர்தலை மனதில் வைத்து எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ற விமர்சனங்களும் எழுந்தது.
இந்நிலையில் பாஜக கூட்டணி கட்சியான சிவசேனையும் மத்திய அரசை விமர்சித்து, அக்கட்சியின் நாளேடான ‛சாம்னா'வில் கட்டுரை வெளியிட்டுள்ளது.
கட்சி பத்திரிகை சாம்னாவில் கூறப்பட்டுள்ளதாவது: அரசியல் அரசியல் ஆதாயம் மற்றும் சுய விளம்பரத்தை பெறுவதுதான் பாஜக நோக்கமாக உள்ளது. குஜராத் தேர்தலை மனதில் வைத்தே ஜிஎஸ்டி, வரி குறைப்பை மத்திய அரசு செய்துள்ளது.
குஜராத் தேர்தலில் படுதோல்வியை தவிர்க்கவே பாஜக இத்தகைய முடிவை எடுத்துள்ளது. ஜிஎஸ்டி வரியில் சமரசத்துக்கு இடமில்லை என தெரிவித்தவர்களே, தற்போது எதற்காக வளைந்து கொடுக்கிறார்கள் என்ற கேள்வி எழுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.