தீ விபத்து நடந்த பரவூர் கோவிலை நேரில் பார்வையிட்ட மோடி
கொல்லம்: தீக்காயத்திற்கு சிகிச்சை அளிக்கும் நிபுணர்கள் குழுவுடன் பிரதமர் மோடி இன்று மாலை கொல்லம் வந்தார். கொல்லத்தில் இருந்து காரில் கிளம்பிய அவர் தீ விபத்து நடந்த பரவூர் கோவிலை பார்வையிட்டார்.
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் பரவூரில் உள்ள புட்டிங்கல் தேவி கோவிலில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 98 ஆக அதிகரித்துள்ளது என்று சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்ட கேரள முதல்வர் உம்மன் சாண்டி தெரிவித்துள்ளார்.

சம்பவ இடத்தில் மீட்பு பணிகள் முடிந்துவிட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் கடற்படை மற்றும் விமானப்படை நிவாரணப் பொருட்களுடன் 4 ஹெலிகாப்டர்களை கொல்லத்திற்கு அனுப்பி வைத்துள்ளது.
பலி எண்ணிக்கை தற்போது 107 ஆக அதிகரித்துள்ளது என்று தகவல்கள் கிடைத்துள்ளது.
இந்நிலையில் பிரதமர் மோடி டெல்லியில் இருந்து கிளம்பி இன்று மாலை கொல்லம் வந்தார். அவர் தன்னுடன் தீக்காயத்திற்கு சிகிச்சை அளிக்கும் நிபுணர்கள் 15 பேரை அழைத்து வந்தார்.
கொல்லத்தில் இருந்து அவர் கார் மூலம் பரவூர் சென்று அங்கிருக்கும் புட்டிங்கல் தேவி கோவிலை நேரில் ஆய்வு செய்தார். கேரள மாநில உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா மற்றும் உள்ளூர் அரசியல் தலைவர்கள் அவருக்கு நிலைமையை விவரித்தனர். அங்கிருந்து கிளம்பிய அவர் திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்றார். தீ விபத்தில் காயமடைந்து அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து அவர் ஆறுதல் கூறினார்.
மோடியை அடுத்து காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தியும் சம்பவம் நடந்த கோவிலுக்கு வந்து நேரில் ஆய்வு செய்ததுடன் காயம் அடைந்தவர்களை மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூறினார்.












Click it and Unblock the Notifications