அடடே மோடி மேஜிக் இன்னும் மிச்சம் மீதி இருக்கும் போலயே!
பாஜகவினால் பொருளாதார வீழ்ச்சி, குறைந்த தொழில் முதலீடு ஆகியவை நடந்ததாக குற்றம்சாட்டிய போதிலும் மோடியின் மேஜிக் எங்கோ ஒரு மூலையில் வேலை செய்கிறது போலயே.
Recommended Video
டெல்லி : பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி ஆகியன நடந்தும் கூட எக்ஸிட் போலில் பாஜக வெற்றி பெறும் என்பதை பார்க்கும்போது மோடியின் மேஜிக் எங்கோ ஒரு மூலையில் வேலை செய்துக் கொண்டுதான் இருக்கிறது போல் தெரிகிறது.
குஜராத்தில் முதல்வராக இருந்த நரேந்திர மோடி அங்கு பெரும்பாலும் மக்கள் நல திட்டங்களை கொண்டு வந்தார் என்பதற்கு அவர் தொடர்ந்து ஆட்சியில் நீடித்தார் என்பதே சான்று. இந்நிலையில் கடந்த 2014-இல் நடைபெற்ற மக்களவை தேர்தலில் அவர் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டார்.
அப்போது வெளிநாடுகளில் இருந்து கருப்பு பணத்தை மீட்பது, அச்சே தின், விலைவாசி குறைப்பு, பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்புகளை உருவாக்குவது உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்தார்.
பெட்ரோல் விலை உயர்வு
இரு முறை தொடர்ந்து மத்தியில் ஆட்சி அமைத்த காங்கிரஸ் மீது பெட்ரோல் விலையேற்றம், அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வு ஆகியவற்றால் மக்கள் அதிருப்தியோடு இருந்தனர். மேலும் அப்போது மோடி அலை வீசியது. பாஜக மத்தியில் ஆட்சி அமைக்க இதுவும் ஒரு காரணம்.
வாக்குறுதிகள் நிறைவேற்றவில்லை
ஆனால் பாஜக ஆட்சி பொறுப்பேற்று 3 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையிலும் இதுவரை கருப்பு பணத்தை மீட்கவில்லை, வாக்காளர்கள் எதிர்பார்த்த அச்சே தின்னும் (நல்ல நாட்கள்) வரவில்லை என்று கூறுகின்றனர். இதில் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டது பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி வரி ஆகும்.
மக்கள் அவதி
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8-ஆம் தேதி இரவு 8 மணிக்கு பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி திடீரென அறிவித்தார். கருப்பு பணத்தை ஒழிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்று கூறப்பட்டாலும் பழைய நோட்டுகளை மாற்ற சாதாரண மக்களே பாடாதபாடுபட்டனர். அதேபோல் ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்பட்டதால் மக்களும்,வியாபாரிகளும் இரட்டை வரி செலுத்த நேரிட்டது.
மோடி அலை
மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை குஜராத் மற்றும் ஹிமாச்சல் பிரதேசம் ஆகிய மாநில பேரவை தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி பிரசாரம் செய்தது. ஆனால் தற்போது ஆங்கில செய்தி நிறுவனங்கள் வெளியிட்ட எக்ஸிட் போலை பார்க்கும் போது கடந்த மக்களவைத் தேர்தலில் வீசிய மோடி அலை எங்கோ மூலையில் இருக்கிறதாகவே கருதப்படுகிறது.