நேதாஜி - ஆர்எஸ்எஸ்.. இருவருக்கும் ஒரே குறிக்கோள்தான்.. ஆர்எஸ்எஸ் மோகன் பகவத் பரபரப்பு பதில்
கொல்கத்தா: நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஒரு 'இடதுசாரி' என்று அவரது மகள் அனிதா போஸ் கூறியிருந்த நிலையில், நேதாஜியின் குறிக்கோளும், ஆர்எஸ்எஸ் அமைப்பின் குறிக்கோளும் ஒரே மாதிரியானவை என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார்.
நாட்டின் மாபெரும் விடுதலை போராட்ட வீரரும் சுதந்திரத்திறகாக போராட ராணுவ படையையே உருவாக்கியவருமான நேதாஜி சுபாஸ் சந்திரபோஸின் பிறந்த தினம் இன்று(ஜன.23) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் சாதிக் மினார் மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் நேதாஜியின் பிறந்த நாளை கொண்டாடுகின்றனர்.
இதுகுறித்து இரண்டு தினங்களுக்கு முன்னர் அறிவிப்பு வெளியாகியிருந்த நிலையில், "தனது தந்தை ஒரு இடதுசாரி" என்று நேதாஜியின் மகள் கூறியிருந்தார். அதாவது தனியார் செய்து ஊடகத்திற்கு பேட்டியளித்த அவர், "அனைத்து மதங்களும் மதிக்கப்பட வேண்டும் என்று எனது தந்தை விரும்பினார். அது அவருடைய கொள்கையாகவும் இருந்தது. அனைத்து மதத்தினரின் ஒத்துழைப்பை அவர் நாடினார். எனது தந்தை ஒரு இந்துதான். ஆனால் அவருடைய கொள்கையை ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் பாஜகவினரும் பிரதிபலிக்கவில்லை.
என் தலையை துண்டாக வெட்டினாலும்.. ஆர்எஸ்எஸ் அலுவலகம் செல்ல மாட்டேன் - ராகுல் காந்தி 'பரபர' பேச்சு
நேரெதிரானது
ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக கொள்கையும் எனது தந்தையின் கொள்கையும் நேரெதிரானது. இவர்கள் எனது தந்தையின் கொள்கையை ஏற்றுக்கொள்ள விரும்பினால் நாங்கள் அதனை வரவேற்போம். ஆனால் தந்தை உயிருடன் இருந்திருந்தால் மத்திய அரசின் மீதான பார்வையிலிருந்து மாறுபட்டிருப்பார். அப்போது இவரை மத்திய அரசு கௌரவித்திருக்காது. எனது தந்தை ஒரு இடதுசாரி" என்று கூறினார். இது நாடு முழுவதும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. ஆனாலும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் இதனை ஏற்காமல் அவருக்கு விழா எடுத்து வருகின்றனர்.
கனவு
அந்த வகையில் இன்று கொல்கத்தாவில் நடைபெற்ற விழாவில் பேசிய மோகன் பகவத் நேதாஜியின் குறிக்கோளும், ஆர்எஸ்எஸ் அமைப்பின் குறிக்கோளும் ஒரே மாதிரியானவை என்று கூறியுள்ளார். அவர் மேலும் பேசியதாவது, "நாங்கள் நேதாஜியை நினைவுகூருகிறோம். ஏனெனில் சுதந்திரப் போராட்டத்திற்கான மதிப்புமிக்க பங்களிப்புகளுக்கு நாங்கள் அவருக்கு நன்னியுள்ளவர்களாக இருக்கிறோம். அதேபோல அவருடைய பண்புகளை உள்வாங்குவதையும் உறுதி செய்வோம். அவர் கட்டியெழுப்ப விரும்பிய இந்தியா பற்றிய கனவு இன்னும் நிறைவேறவில்லை. அந்த கனவை நிஜமாக்க நாம் உழைக்க வேண்டும்.
விஸ்வ குரு
சூழ்நிலைகள் மற்றும் பாதைகள் வேறுபடலாம், ஆனால் சேருமிடம் ஒன்றுதான். நேதாஜி முதலில் காங்கிரசுடன் இணைந்தார். அதன் பாதையான சத்தியாகிரகத்தை பின்பற்றினார். ஆனால் சுதந்திர போராட்டத்திற்கு இது போதாது என்றும் இதைவிட அதிகமான தேவை இருக்கிறது என்றும் உணர்ந்தார். எனவே அதை நோக்கி பயணித்தார். எனவேதான் பாதைகள் வேறுபடலாம் ஆனால் இலக்குகள் ஒன்றுதான் என்று சொன்னேன். அவரின் லட்சியங்கள் நமக்கு முன்னால்தான் இருக்கிறது. அவர் கொண்டிருந்த இலக்குகள்தான் நம்முடைய குறிகோள். இந்தியா உலகிற்கு விஸ்வ குருவாக மாற வேண்டும் என்று அவர் விரும்பியிருந்தார். எனவே நாம் அதை நோக்கி உழைக்க வேண்டும்" என்று கூறினார்.
சலசலப்பு
நேதாஜியின் கொள்கைகள் பாஜக, ஆர்.எஸ்.எஸ் அமைப்புடன் வேறுபட்டு இடதுசாரியுடன் ஒன்றுபடுகிறது என்று அவரது மகள் பகிரங்கமாக கூறியிருந்த நிலையில், நேதாஜியின் கொள்கையும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் கொள்கையும் ஒரே மாதிரி இருக்கிறது என்று மோகன் பகவத் கூறியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.