பெங்களூரில் அவலம்: பள்ளியில் 3 வயது சிறுமியை பலாத்காரம் செய்த அட்டென்டர்
பெங்களூர்: கிழக்கு பெங்களூரில் உள்ள தனியார் பள்ளியில் 3 வயது சிறுமி 2 முறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது.
கிழக்கு பெங்களூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வரும் 3 வயது சிறுமி கடந்த மாதம் 26ம் தேதி வீட்டுக்கு சென்ற பிறகு ஒரு மாதிரியாக இருந்துள்ளார். அதில் இருந்து தொடர்ந்து 2 நாட்களுக்கு சிறுமி சோர்ந்தே காணப்பட்டார். பெற்றோர் விசாரித்தபோது பள்ளியில் வேலை செய்யும் அட்டென்டர் தன்னை ஏதோ செய்ததாகவும் தனக்கு வலிப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து சிறுமியை அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக தெரிவித்தனர். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இது குறித்து போலீசில் புகார் அளித்தனர். அவர்களின் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அட்டென்டரை கடந்த 30ம் தேதி கைது செய்தனர்.
சிறுமியை அந்த அட்டென்டர் கடந்த அக்டோபர் மாதம் 22ம் தேதியும் பலாத்காரம் செய்ததாக அவரின் பெற்றோர் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஜூலை மாதத்தில் இருந்து இதுவரை பெங்களூரில் 5 பள்ளி சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர். சிறுமிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த பள்ளிகளில் சிசிடிவி கேமரா பொருத்தவும், வேன்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்தவும் போலீசார் உத்தரவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications