சியாச்சின் விபத்து: டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் பெங்களூர் வந்த 7 வீரர்களின் உடல்கள்
பெங்களூர்: சியாச்சினில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி பலியான வீரர்களில் 7 பேரின் உடல்கள் திங்கட்கிழமை இரவு பெங்களூர் வந்தது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள உலகின் மிக உயரமான போர் முனையான சியாச்சினில் கடந்த 3ம் தேதி ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி மெட்ராஸ் ரெஜிமென்ட்டைச் சேர்ந்த 10 வீரர்கள் பலியாகினர். பனிச்சரிவில் சிக்கி உயிருடன் மீட்கப்பட்ட கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த வீரர் ஹனுமந்தப்பா மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.

அவரது உடல் அவரது சொந்த ஊரான பெடாதூரில் நல்லடக்கம் செய்யப்பட்டது. மற்ற 9 வீரர்களின் உடல்கள் திங்கட்கிழமை தான் டெல்லியில் இருந்து அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
டெல்லியில் இருந்து விமானப்படைக்கு சொந்தமான விமானத்தில் 7 வீரர்களின் உடல்கள் பெங்களூரில் உள்ள ஹெச்.ஏ.எல். விமான நிலையத்திற்கு திங்கட்கிழமை இரவு 7.15 மணிக்கு வந்தது. விமானம் 5.30 மணிக்கே பெங்களூருக்கு வருவதாக இருந்தது. அதனால் பத்திரிக்கையாளர்கள் 5 மணிக்கே விமான நிலையத்திற்கு வந்து காத்திருந்தனர்.
டெல்லியில் இருந்து விமானம் கிளம்ப தாமதமானதால் பெங்களூருக்கு தாமதமாக வந்தது. சுபேதார் நாகேஷா( தேஜுர், ஹாஸன் மாவட்டம்), சிப்பாய் மகேஷா(ஹெச்.டி. கோட்டே, மைசூர் மாவட்டம்), சிப்பாய் ராமமூர்த்தி(கிருஷ்ணகிரி மாவட்டம்), ஹவில்தார் ஏழுமலை(வேலூர் மாவட்டம்), லான்ஸ் ஹவில்தார் எஸ். குமார்(தேனி மாவட்டம்), சிப்பாய் கணேசன்(மதுரை மாவட்டம்), லான்ஸ் நாயக் சுதீஷ்(கொல்லம் மாவட்டம்) ஆகியோரின் உடல்கள் ஹெச்.ஏ.எல். விமான நிலையத்திற்கு வந்தது.
விமான நிலையத்தில் வீரர்களின் உடல்களை பெற கேரளா மற்றும் கர்நாடக ராணுவ அதிகாரிகள் வந்திருந்தனர். விமான நிலையத்தில் வீரர்களின் உடல்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.
வீரர்கள் நாகேஷா, மகேஷா மற்றும் ராமமூர்த்தி ஆகியோரின் உடல்கள் நேற்று இரவு ஆம்புலன்ஸ் மூலம் அவரவர் ஊர்களுக்கு கொண்டு செல்லப்பட்டது. இதற்காக விமான நிலையத்தில் இருந்து ஓசூர் ரோடு, மைசூர் ரோடு மற்றும் தும்கூர் ரோட்டில் இரவு 7 மணி முதல் 8 மணி வரை சிக்னல் இல்லா கிரீன் காரிடர் அமைத்திருந்தனர் போக்குவரத்து போலீசார்.












Click it and Unblock the Notifications