முலாயம் மீது புகார் கூறிய ஐபிஎஸ் அதிகாரி மீது பலாத்கார வழக்கு.. உ.பி ஆளுங்கட்சி அதிரடி
லக்னோ: உத்திரப்பிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சித் தலைவருமான முலாயம் சிங் யாதவ் தன்னை மிரட்டுவதாக புகார் தெரிவித்திருந்த ஐ.பி.எஸ். அதிகாரி அமிதாப் மீது அதிரடியாக பலாத்கார வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது. ஆனால், இது தனது புகாருக்கு முலாயம் சிங் கொடுத்த ரிட்டர்ன் கிப்ட் என போலீஸ் அதிகாரி அமிதாப் தெரிவித்துள்ளார்.
உத்திரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சி தலைமையில் அகிலேஷ் யாதவ் தலைமையிலான ஆட்சி நடை பெற்று வருகிறது. இந்நிலையில், அமிதாப் தாக்குர் என்ற மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர், உத்திரப்பிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சித் தலைவருமான முலாயம் சிங் யாதவ் தன்னை மிரட்டுவதாக புகார் தெரிவித்தார்.
அமிதாப்பிற்கு நேற்று முன் தினம் மாலையில் போன் செய்த முலாயம், ‘'ஜஸ்ரானா மற்றும் பெரோசாபாத்தில், நீ அடிபட்டது மறந்து போனதா... உன் போக்கை மாற்றிக் கொள்ளவில்லை என்றால், அதை விட மிகவும் கடினமான விளைவுகளை சந்திக்க வேண்டிஇருக்கும்' என மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான ஆடியோவை செய்தியாளர்களுக்கு போட்டுக் காட்டிய அமிதாப், போலீசிலும் புகார் அளித்தார்.
ஆனால், முலாயம் மீது அமிதாப் புகார் தெரிவித்த சில நிமிடங்களிலேயே அவர் மீது பலாத்கார வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது. லக்னோவின் கோமதி நகர் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்ற இளம்பெண் ஒருவர், 'போலீஸ் அதிகாரி அமிதாப் தாக்குர் என்னை பலாத்காரம் செய்து விட்டார்' எனப் புகார் அளித்தார். அந்தப் புகாரை பதிவு செய்த போலீசார், இன்று அதை வழக்காக மாற்றினர்.
இது குறித்து உத்திரப்பிரதேச எதிர்கட்சியான, முன்னாள் முதல்வர் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கண்டனம் தெரிவித்துள்ளது.மேலும், ‘இந்த விவகாரங்களை, மாநில போலீசார் விசாரிக்கக் கூடாது. சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும்' என தெரிவித்து உள்ளது.
இந்தப் பலாத்காரப் புகார் தொடர்பாக போலீஸ் அதிகாரி அமிதாப் கூறுகையில், ‘முலாயம் சிங் மீதான எனது புகாருக்கு, இந்தப் பலாத்காரப் புகார் ரிட்டர்ன் கிப்ட்' எனத் தெரிவித்துள்ளார்.
போலீஸ் அதிகாரி அமிதாப் தாக்குரின் மனைவியும், சமூக ஆர்வலருமான நூதன் இது தொடர்பாக கூறுகையில், "என் கணவர் மீது பொய் வழக்கு தொடரப்பட்டுள்ளது. என் கணவரும் வழக்கு தொடர்ந்துள்ளார்; அவர் மீது பெண் ஒருவரும் வழக்கு தொடுத்துள்ளார். இரண்டையும், போலீசார் நியாயமாக விசாரிக்க வேண்டும். இதுபோன்ற மிரட்டல்களுக்கு எல்லாம் நாங்கள் அஞ்சுபவர்கள் இல்லை. இது மட்டுமல்ல, இன்னும் பல வழக்குகள் என் மீதும், என் கணவர் மீதும் பாயும் என நம்புகிறேன்" என்கிறார்.