முல்லைப் பெரியாறு விவகாரம்: கேரளாவில் பிசுபிசுத்துப் போன பந்த்- கடைகள் திறப்பு, பேருந்துகள் ஓடின
மூணாறு: முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்ததை எதிர்த்து கேரளாவில் நடதப்பட்ட முழுஅடைப்பு போராட்டம் படுதோல்வி அடைந்துள்ளது.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடி வரை உயர்த்தலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து முல்லைப் பெரியாறு போராட்டக் குழு கேரளாவில் நேற்று முழுஅடைப்புக்கு அழைப்பு விடுத்தது. இந்த முழுஅடைப்புக்கு அரசியல் கட்சிகள் மற்றும் வர்த்தக சங்கங்கள் ஆதரவு அளிக்கவில்லை.
இடுக்கி மாவட்டம் கட்டப்பனை, வண்டிப்பெரியாறு உள்ளிட்ட இடங்களில் மட்டும் அனைத்து கடைகளும் மூடப்பட்டு, பேருந்துகள் இயக்கப்படவில்லை. பிரபல சுற்றுலாத்தலமான மூணாறில் காங்கிரஸ் கூட்டணி கட்சியினருக்கு சொந்தமான கடைகள் மற்றும் ஹோட்டல்கள் திறந்திருந்தன.
தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு சென்ற வாகனங்கள் எல்லையோரம் உள்ள சோதனைச்சாவடிகளில் தடுத்து நிறுத்தப்பட்டது. இதனால் தமிழகத்தில் இருந்து இடுக்கி மாவட்டத்திற்குள் பேருந்துகள் செல்லவில்ல.
இடுக்கி தவிர கேரளாவின் பிற பகுதிகளில் கடைகள் திறக்கப்பட்டு, வாகனங்கள் வழக்கம் போல் ஓடின. இதனால் முழுஅடைப்பு போராட்டம் படுதோல்வி அடைந்தது.