அந்த மனசு தான் கடவுள்.. பறவைகளுக்காக 6 மாடி கட்டிடத்தை கட்டிய ஜெய்ப்பூர் மக்கள்.. குவியும் பாராட்டு!
ஜெய்ப்பூர்: பறவைகளைக் காக்க ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் எடுக்கப்பட்ட முயற்சியைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.
இந்த 21ஆம் நூற்றாண்டில் மனிதக் குல வரலாற்றில் இல்லாத அளவுக்கு நாம் மிக வேகமான வளர்ச்சி அடைந்து வருகிறோம். ஆனால், இதற்காக நாம் விலைமதிப்பற்ற இயற்கையையும் இழந்து வருகிறோம்.
காடுகள் அழிப்பு, பனிப்பாறை உருகுவது போன்றவை முன்னெப்போதும் இல்லாத வேகத்தில் நடந்து வருகிறது. இதனால் நாம் அனுபவித்த பல விஷயங்கள் வருங்கால சந்ததிக்குக் கிடைக்காமல் போகும் சூழலும் ஏற்பட்டுள்ளது.

மனித மிருக மோதல்கள்
அதேபோல மனித மிருக மோதல்களும் தொடர்கதையாகி வருகிறது. பல பகுதிகளில் விலங்குகளின் வாழ்விடங்களில் அத்துமீறி நுழைந்து, கட்டுமானங்களைக் கட்டும் மனிதர்கள், பின்னர் விலங்குகள் அச்சுறுத்துவதாகப் புகார் கூறுகின்றனர். தமிழ்நாட்டிலேயே கூட பல நேரங்களில் யானைகள், சிறுத்தைகள், புலிகள் மனிதர்கள் வாழும் பகுதிக்குள் நுழையும் சம்பவங்கள் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

6 அடுக்கு கட்டிடம்
இதனிடையே ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூரில் பறவைகளைக் காக்க முன்னெடுக்கப்பட்ட விஷயம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ஆறு மாடிக் கட்டிடம் ஒன்று பிரத்தியேகமாகப் பறவைகளுக்காகக் கட்டப்பட்டுள்ளது. இந்த முயற்சியை ஜெய்ப்பூரைச் சேர்ந்த பிஞ்சரா போல் கோசாலா உறுப்பினர்கள் மேற்கொண்டனர். இந்த கட்டிடத்தில் ஒரே நேரத்தில் 2,000 பறவைகள் வரை தங்கலாம்.

அழகிய வீடு
இந்த அழகான பறவை இல்லத்தின் ஃபோட்டோக்கள் இணையத்தில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது. பெரிய இந்தக் கட்டிடத்தில் பறவைகள் ஓய்வு எடுக்க வசதியாகப் பல சிறிய கேட் போன்ற அமைப்புகளும் உள்ளது அந்த படத்தில் தெரிகிறது. மரங்களை வெட்டுவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் காரணமாகப் பறவைகளின் வாழ்விடங்கள் அவிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த முயற்சி நெட்டிசன்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.

என்ன காரணம்
இது தொடர்பாக ஜெய்ப்பூரின் பிஞ்சரா போல் கோஷாலா உறுப்பினர் ஆர் விஜயவர்கியா கூறுகையில், "இது ஒரே நேரத்தில் சுமார் 2,000 பறவைகளுக்குத் தங்குமிடமாக இருக்கும்" என்றார். இதுபோன்ற ஒரு யோசனை எப்படி வந்தது என்ற கேள்விக்குப் பதில் அளித்த அவர், "இன்று, மக்கள் பெரிய கட்டிடங்களில் வாழ்கிறார்கள், ஆனால் அவர்கள் பறவைகளை மறந்துவிடுகிறார்கள், அதனால்தான் நாங்கள் இதைக் கொண்டு வந்தோம்" என்றோம்.

சந்தேகம்
ஜெய்ப்பூரில் முன்னெடுக்கப்பட்ட இந்தச் செயலை இணையத்தில் பலரும் பாராட்டி வருகின்றனர். பலரும் தங்கள் நகரிலும் இதேபோன்ற கட்டிடத்தைக் கட்ட வேண்டும் என்ற விருப்பத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அதேநேரம் இன்னும் சிலர் இயற்கையாக மரங்களில் வாழ வேண்டிய பறவைகளால் எப்படி செயற்கை கட்டிடங்களில் வாழ முடியும் என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications