கடத்தல் எச்சரிக்கை.. மும்பை, சென்னை மற்றும் ஹைதராபாத் விமான நிலையங்களுக்கு உச்சக்கட்ட பாதுகாப்பு!
விமானங்களை கடத்தி தகர்க்க திட்டமிடப்பட்டுள்ளதாக வெளியான தகவலையடுத்த சென்னை, மும்பை, ஹைதராபாத் விமான நிலையங்களுக்கு உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மும்பை: சென்னை, ஹைதராபாத், மும்பை விமான நிலையங்களில் விமானங்களை கடத்தி தகர்க்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து சென்னை, மும்பை, ஹைதராபாத் விமான நிலையங்களுக்கு உச்சகட்ட பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை, மும்பை மற்றும் ஐதராபாத் விமான நிலையங்களில் விமானத்தை கடத்துவதற்காக ஒரு பெண் தலைமையில் 6 நபர்களக்கு இமெயில் பரிமாற்றம் நடந்துள்ளதாக தெரிகிறது. அதன்படி ஞாயிற்றுக் கிழமையான இன்று 23 பேர் கொண்ட குழு சென்னை, ஹைதராபாத், மும்பை விமான நிலையங்களில் விமானங்களை கடத்த திட்டமிட்டப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதுதொடர்பான தகவலின் அடிப்படையில் விமான நிலையங்களுக்கு பாதுகாப்பு முகமைகள் எச்சரிக்கைவிடுத்துள்ளன. இதைத்தொடர்ந்து 3 விமான நிலையங்களுக்கும் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தீவிரவாதத்துக்கு எதிரான திட்டம்
சென்னை, மும்பை, ஐதராபாத் விமான நிலையங்களில் பாதுகாப்பை அதிகரிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. மும்பை விமான நிலையத்தில் ஏற்கனவே தீவிரவாதத்துக்கு எதிரான திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இந்நிலையில் அந்தத்திட்டம் தற்போது சென்னை மற்றும் ஹைதராபத் விமான நிலையங்களுக்கும் கொண்டுவரப்பட்டுள்ளது.
சென்னையில் 7 அடுக்கு பாதுகாப்பு
இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு பாதுகாப்பு பணியில் கூடுதல் மத்திய தொழிற்பாதுகாப்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.வெடிகுண்டு நிபுணர்களும் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள்.
பயணிகளிடம் தீவிர சோதனை
விமான நிலையத்துக்கு வரும் அனைத்து வாகனங்களும் பலத்த சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகிறது.வெளிநாட்டு முனையம், உள்நாட்டு முனையத்துக்கு வரும் பயணிகள் அனைவரும் கூடுதல் சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகிறார்கள்.
பாதுகாப்பு வளையத்தில் விமான நிலையங்கள்
பாதுகாப்பு கருதி சென்னை விமான நிலையத்தில் இன்று ஒரு நாள் மட்டும் பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. கடத்தல் திட்ட பட்டியலில் உள்ள 3 விமான நிலையங்களும் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.