தேசிய கீதத்துக்கு எழுந்து நிற்காத முஸ்லிம் குடும்பம் மும்பை தியேட்டரிலிருந்து வெளியேற்றப்பட்டதா?
மும்பை: திரையரங்கில் தேசிய கீதம் ஒலிபரப்பும்போது இருக்கையை விட்டு எழுந்து நிற்காத முஸ்லிம் குடும்பம் வெளியேற்றப்பட்டதாக உலவும் ஒரு வீடியோ காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய கீதம் இசைக்கப்படும்போது, எழுந்து நிற்பது என்பது தேசத்துக்கு கொடுக்கும் மரியாதையாக பார்க்கப்படுகிறது. தென் இந்தியாவில் இதுபற்றி பெரிய அளவுக்கு விவாதங்கள் வந்ததில்லை என்ற போதிலும், வட இந்தியர்கள், இப்படி எழுந்து நிற்பதை கடமையாக வைத்துள்ளனர்.
அலுவலக டிவியில் தேசிய கீதம் இசைக்கப்படும் காட்சி ஒளிபரப்பினால்கூட எழுந்து நிற்கும் வட இந்தியர்கள் அதிகம். ஆனால், சகிப்புத்தன்மை பற்றி சர்ச்சை எழுந்துள்ள இக்காலகட்டத்தில், ஒரு முஸ்லிம் குடும்பம், தேசிய கீதத்தின் பெயரால் அவமரியாதை செய்யப்பட்டுள்ள சம்பவம் மும்பையில் நடந்துள்ளது.
மும்பையிலுள்ள பி.வி.ஆர் திரையரங்கில், படம் ஆரம்பிக்கு முன்பு தேசிய கீதம் போடப்பட்டதாகவும், அப்போது எல்லோரும் எழுந்து நின்றபோது, ஒரு முஸ்லிம் குடும்பம் மட்டும் எழுந்து நிற்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இதையடுத்து எழுந்து நின்ற பிறர், அந்த குடும்பத்தினரை கண்டித்து, தியேட்டரை விட்டு வெளியேறுமாறு கூறியதாகவும், அவர்கள் வெளியேறிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
@BDUTT Muslim family asked to leave PVR theatre Since they refused to stand for the National Anthem pic.twitter.com/xqV6bnhQRy
— DK (@DkDk1967) November 29, 2015
இப்படிப்பட்ட காட்சி ஒன்று, சமூக வலைத்தளங்களில் வேகமாக பதிவாகிவருகிறது. இந்த வீடியோவில் உண்மைத்தன்மை உள்ளதா, அல்லது, இரு பிரிவினரிடையே வெறுப்பை உருவாக்கும் வகையில் உருவாக்கப்பட்ட வீடியோவா என்பது குறித்த தெளிவான அறிவிப்புகள் எதுவும் இதுவரை வெளியே வரவில்லை.