உச்சநீதிமன்ற நீதிபதிகள் நடுவே இணக்கம் இல்லை: மூத்த வழக்கறிஞர் பாலி நாரிமன் ஆதங்கம்
டெல்லி: புகழ்பெற்ற சட்டத்துறை வல்லுநரும், மூத்த உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான பாலி நாரிமன் God Save the Hon'ble Supreme Court என்ற பெயரில் புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார்.
இது தொடர்பாக ஆங்கில தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: சமீபத்தில் இந்திய நீதிதுறையில் நடைபெற்ற சில நிகழ்வுகளை மையப்படுத்தி இந்தப் புத்தகம் எழுதப்பட்டுள்ளது.
அந்த சர்ச்சைகள் மக்கள் மனதில் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.
வேறு ஒரு கருத்து
நான்கு நீதிபதிகளும் ஒரு கருத்தைக் கூறினால் தலைமை நீதிபதி வேறு ஒரு கருத்தை தெரிவித்தார். பிறரோ அது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. இதிலிருந்து மக்கள் என்ன முடிவுக்கு வர முடியும்? நீதிபதி செலமேஸ்வர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் (MCI) ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக பிறப்பித்த உத்தரவுக்கு பிறகே மொத்த சர்ச்சைகளும் ஆரம்பித்தன என்றார்.
வாய்ப்பு இல்லை
தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, சுப்ரீம் கோர்ட் குறித்த மக்களின் கண்ணோட்டத்தை சரியான பாதைக்கு கொண்டு வருவாரா என்ற கேள்விக்கு நாரிமன் பதில் கூறுகையில், அதற்கான வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது. குற்றம் சுமத்திய நான்கு நீதிபதிகளையும் தலைமை நீதிபதி அழைத்து பேசியிருக்கவேண்டும். ஒருவர் மற்றொருவரை அணுகவே இல்லை. ஆனால் அணுகி இருக்க வேண்டும்.
இணைந்து விசாரித்திருக்கலாம்
தலைமை நீதிபதி தனது அடுத்த சீனியராக இருந்த செல்லமேஸ்வருடன் அமர்ந்து வழக்கை விசாரித்திருக்க வேண்டும். இதன் மூலம் நீதிபதிகளுக்கு நடுவே நல்ல அபிப்பிராயம் ஏற்பட்டிருக்கும். உச்சநீதிமன்றத்தில், ஒற்றுமை குறைவாக இருப்பது உண்மைதான். ஒருவரை ஒருவர் இணைந்து செயல்பட வேண்டும். தனித்தனியாக செயல்பட கூடாது.
பிரஸ் மீட்டால் பிரச்சினை இல்லை
பிரஸ்மீட்டில் பங்கேற்றதாலேயே தீபக் மிஸ்ராவுக்கு அடுத்தபடியாக தலைமை நீதிபதி பொறுப்பை ஏற்க தகுதியாக உள்ள நீதிபதி ரஞ்சன் கோகாய் அந்தப் பதவிக்கு வர இயலுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது சரியான கேள்வி கிடையாது. பத்திரிக்கையாளர் சந்திப்பில் பங்கேற்றதாலேயே ஒருவர் தலைமை நீதிபதி பொறுப்புக்கு வர முடியாது என்று சட்டத்தில் இடம் கிடையாது.
சர்ச்சையல்ல
நான் இந்த புதிய புத்தகத்தை எழுதியுள்ளது சர்ச்சையை கிளப்பும் நோக்கத்திற்காக அல்ல. சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காகதான். எனது கவலை நீதிபதிகள் குறித்து கிடையாது, நீதிமன்றம் என்ற அமைப்பைப் பற்றியது. தலைமை நீதிபதி பற்றி கிடையாது. தலைமை நீதிபதி என்ற அமைப்பை பற்றியது. இவ்வாறு பாலி நாரிமன் தெரிவித்தார். செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், குரியன் ஜோசப், மதன் பி லோகூர் ஆகிய 4 நீதிபதிகள் கடந்த ஜனவரி மாதம், பிரஸ் மீட் செய்தனர். உச்சநீதிமன்ற வரலாற்றில் நீதிபதிகள் பிரஸ் மீட் செய்தது அதுதான் முதல் முறை. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி செயல்பாடு பற்றி அவர்கள் ஆதங்கம் வெளிப்படுத்தியிருந்தனர்.