நாகாலாந்து: ராணுவத்தால் 14 அப்பாவிகள் சுட்டுக் கொலை- பொதுமக்கள் தாக்கியதில் ஒரு ராணுவ வீரர் மரணம்!
கோஹிமா: நாகாலாந்து மாநிலத்தில் ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பொதுமக்கள் தாக்குதல் நடத்தியதில் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து நாகாலாந்து சம்பவங்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது.
நாகாலாந்து மாநிலத்தின் மோன் மாவட்டத்தில் சனிக்கிழமை மாலை நிலக்கரி சுரங்க தொழிலாளர்கள் மீது ராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். நாகா தீவிரவாதிகள் அல்லது உல்பா தீவிரவாதிகள் என சந்தேகித்து இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் நடந்தது.
65வது நினைவு தினம்: டெல்லியில் அம்பேத்கர் சிலைக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் மரியாதை
பலி எண்ணிக்கை 14 ஆக அதிகரிப்பு
இதில் சம்பவ இடத்திலேயே 13 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 11 பேர் படுகாயமடைந்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 11 பேரில் ஒருவர் உயிரிழந்தார். இதனையடுத்து ராணுவம் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.
மக்கள் தாக்குதல்
இதனால் கொந்தளித்த பொதுமக்கள் மோன் மாவட்டத்தில் அஸ்ஸாம் ரைபிள்ஸ் படைப் பிரிவினர் மீது தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 6 பேர் படுகாயமடைந்தனர். நாகாலாந்து சம்பவங்களில் இதுவரை மொத்தம் 15 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் நாகாலாந்து முதல்வர் நைபியு ரியோ, மோன் மாவட்டத்துக்கு நேரில் சென்று ராணுவத்தால் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவிக்கிறார். மேலும் கொல்லப்பட்டோர் குடும்பத்தினருக்கு தலா ரூ5 லட்சம் நிதி உதவி வழங்குகிறார். இதேபோல் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் 5 பேர் கொண்ட குழுவும் மோன் மாவட்டத்துக்கு செல்ல உள்ளது.
கொலை வழக்கு பதிவு
இப்படுகொலை சம்பவம் தொடர்பாக விசாரிக்க நாகாலாந்து மாநில அரசு ஏற்கனவே விசாரணை குழுவையும் அமைத்துள்ளது. இச்சம்பவத்தை ஒரு போர்க்குற்றம் என்றும் இனப்படுகொலை என்றும் நாகாலாந்து மாநில பாஜக குற்றம்சாட்டியுள்ளது. இதனிடையே 14 பொதுமக்களைப் படுகொலை செய்த ராணுவத்தினர் மீது தற்போது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. நாகாலாந்து போலீசார் தாமாக முன்வந்து இந்த வழக்கைப் பதிவு செய்துள்ளனர்.
மோன் மாவட்டத்தில் தடை உத்தரவு
பொதுமக்கள் படுகொலையால் கொந்தளிப்புடன் இருக்கும் மோன் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் தலைநகர் கோஹிமாவில் நடைபெற்று வந்த ஹார்ன்பில் கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நாகாலாந்து மாநிலத்தின் பல பகுதிகளில் இன்று முழு அடைப்பு போராட்டத்துக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இப்படுகொலை சம்பவத்துக்கு ராணுவம் வருத்தம் தெரிவித்துள்ளது.