சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெ. தரப்பு வக்கீல் மாற்றம்! மூத்த வழக்கறிஞர் நாகேஷ்வர ராவ் ஆஜர்
பெங்களூரு: கர்நாடக ஹைகோர்ட்டில் நடந்து வரும் சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சார்பில் உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் நாகேஷ்வரராவ் ஆஜராகி வாதிட தொடங்கியுள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய 4 பேர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் நால்வரையும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தது. இந்த வழக்கின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி முன்னிலையில் நடந்து வருகிறது.
கடந்த 5ம் தேதி தொடங்கிய விசாரணை தொடர்ந்து தினமும் நடை பெறுகிறது. இதுவரை ஜெயலலிதா தரப்பில், வக்கீல் குமார் மேல் முறையீட்டு மனு குறித்து வாதாடி வந்தார். இந்நிலையில் இன்று காலை, நீதிபதி குமாரசாமி முன்னிலையில், 6வது நாளாக வாதம் தொடங்கியது. ஆனால் ஜெயலலிதா தரப்பில் குமாருக்கு பதிலாக, நாகேஷ்வரராவ் ஆஜராகினார்.
உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞரான நாகேஷ்வரராவ், இந்த வழக்கில் முதல்முறையாக ஆஜராக தொடங்கியுள்ளார். குமாரின் வாதத்தைவிட நாகேஷ்வரராவ் சிறப்பான வாதத்தை முன்னெடுத்து வைப்பார் என்ற நம்பிக்கையில் ஜெயலலிதா தரப்பு அவரை வரவழைத்துள்ளது.
நாகேஷ்வரராவ் இன்று வாதிடுகையில் "ஜெயலலிதா தனது வருமானத்துக்கு இதுவரை சரியாக கணக்கு காட்டி வரி செலுத்தி வருகிறார். வருமான வரி செலுத்தியதற்கான ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ஆனால் கீழ் கோர்ட்டில் வருமான வரி தாக்கல் செய்தது தொடர்பான ஆவணங்கள் முறையாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. இது முக்கியமாக கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டியதாகும்" என்று வாதாடினார்.
இந்த வழக்கில், வழக்கம்போல, அரசு தரப்பில், பவானி சிங் ஆஜர் ஆனார். இவரை அரசு வக்கீல் பதவியில் இருந்து நீக்கிவிட்டு வேறு வக்கீலை நியமிக்க வேண்டும் என்று அன்பழகன் சார்பில் கர்நாடக அரசுக்கும், கர்நாடக ஹைகோர்ட் தலைமை நீதிபதிக்கும் கடிதம் எழுதப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.