”கருப்பு பணத்தை மீட்காத காங்கிரஸ் அரசு” மோடி பேச்சு
சிவசாகர்: பல நாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தை மீட்டு இந்தியாவுக்கு கொண்டு வர காங்கிரஸ் கட்சி அக்கறை காட்டாதது ஏன் என்று பாஜக கட்சியின் பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.
அஸ்ஸாம் மாநிலம் சிவசாகரில் திங்கள்கிழமை நடைபெற்ற பாஜக தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய மோடி , "கருப்புப் பணத்தை மீட்டு நாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று நாட்டு மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் கட்சி கருப்புப் பணத்தை மீட்க தடை ஏற்படுத்தி வருகிறது. ஏனென்றால் கருப்புப் பணத்தின் பெரும் பகுதி காங்கிரஸ் கட்சியினருக்கு சொந்தமானது.
கருப்புப் பணம் மீட்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியை காங்கிரஸ் கட்சி நிறைவேற்றவில்லை. இந்த வாக்குறுதியை மீண்டும் 2014 ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையிலும் அளித்து காங்கிரஸ் கட்சி மக்களை ஏமாற்றி உள்ளது.
ஊழல், அராஜகம், மோசமான நிர்வாகம் ஆகிவற்றில் காங்கிரஸ் கட்சி எல்லை மீறியுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு வலிமையான தலைவரோ, கொள்கைகளோ, நாட்டின் மீது அக்கறையோ கிடையாது" என்று அவர் பேசினார்.
அதற்கு முன்பாக அஸ்ஸாம் மாநிலம் பிஸ்வநாத் சரியாலியில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பேசிய மோடி, "ஆட்சிப் பொறுப்புக்கு வந்த 100 நாள்களில் நாட்டின் பணவீக்கம் குறைக்கப்படும் என்று கடந்த தேர்தலில் அளித்த வாக்குறுதியை காங்கிரஸ் கட்சி நிறைவேற்றவில்லை. வரும் தேர்தலிலும் அதே வாக்குறுதியை அளித்து மக்களை காங்கிரஸ் கட்சி ஏமாற்றி வருகிறது.
பொய்யான வாக்குறுதிகளை சோனியா காந்தி அளித்து நாட்டு மக்களின் கண்களில் மண்ணை மட்டுமல்ல மிளகாய்ப் பொடியையும் சேர்த்து தூவியுள்ளார். அது தற்போது நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் நடைபெறுகிறது. கேரளத்தில் இந்திய மீனவர்கள் இருவரைக் கொன்ற இத்தாலி கடற்படை வீரர்கள் யாருடைய கட்டளையின் பேரில் அவர்களது நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர் என்பதற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பதிலளிக்க வேண்டும்" என்று ஆவேசமாக பேசியுள்ளார் நரேந்திர மோடி.