தெற்காசியாவில் புது யுகம் படைக்க வங்கதேச பிரதமருக்கு மோடி அழைப்பு
டெல்லி: தெற்காசியாவில் ஒத்துழைப்புடன் கூடிய புதிய யுகத்தை படைக்க இணைந்து பணியாற்றுமாறு வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினாவுக்கு கடிதம் மூலம் வேண்டுகோள்விடுத்துள்ளார் பிரதமர் நரேந்திரமோடி.
வங்கதேசத்தில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த நாட்டு பிரதமர் ஷேக் ஹசினாவுக்கு இந்திய பிரதமர் மோடி எழுதிய கடிதத்தை அப்போது அவர் அளித்தார். அந்த கடிதத்தில் மோடி கூறியுள்ளதாவது: "தெற்காசிய பிராந்தியத்தில், ஒத்துழைப்பு, இணைப்பு போன்றவற்றை ஏற்படுத்தி புதிய யுகத்தை உருவாக்க நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து பணியாற்ற வேண்டியது அவசியம்.

இதன் மூலம் நமது நாடுகளில் வளத்தை உருவாக்க முடியும். வங்கதேசத்தை வெறுமனே அண்டை நாடாக இந்தியாவால் பார்க்க முடியவில்லை. வங்கதேசத்துடன் இந்தியா கலாச்சாரம், வரலாறு ஆகியவற்றை பகிர்ந்து கொண்டுள்ளது. எனது அரசு இவ்விரு நாடுகள் நடுவேயான உறவை மேலும் வலுப்படுத்த உறுதிபூண்டுள்ளது". இவ்வாறு மோடி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வங்கதேசத்துக்கு வருமாறு ஷேக் ஹசினா விடுத்த அழைப்பை ஏற்றுக்கொள்வதாக கூறியுள்ள மோடி, அதேபோல, வங்கதேச பிரதமரும் இந்தியாவுக்கு வர வேண்டும் என்றும் அக்கடிதத்தில் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications