காகிதப் புலிக்கே பயப்படும் நீங்கள் இந்த நிஜப் புலியை பார்த்தால்...? மம்தாவுக்கு மோடி பதிலடி
கொல்கத்தா: தன்னைக் காகிதப் புலி என விமர்சித்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, நிஜப்புலியான தன்னைக் கண்டால் என்ன ஆவார் என தனது பிரச்சாரத்தில் கேள்வி எழுப்பியுள்ளார் மோடி.
பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திர மோடி இன்று மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள பன்குரா என்ற இடத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது தன்னை ‘காகிதப் புலி' என்று விமர்சித்திருந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மேற்கு வங்காளம் மாநில முதல்வருமான மம்தா பானர்ஜிக்கு பதிலடி தரும் வகையில் அவர் உரையாற்றினார்.
இது தொடர்பாக மேலும் அவர் பேசியதாவது :-

என்ன ஆவீர்கள் மம்தா..?
என்னை காகிதப்புலி என்று அழைத்த நீங்கள் (மம்தா) என்னைப் பார்த்து ஏன் பயப்படுகிறீர்கள்? என்று ஆச்சரியப்படுகிறேன். காகிதப் புலியே உங்களுக்கு இவ்வளவு பயத்தை ஏற்படுத்தியுள்ளது என்றால், ஏழை மக்களை ஏமாற்றிய சாரதா நிதி நிறுவன மோசடியில் ஈடுபட்ட அனைவரையும் ஜெயிலில் தள்ளி, முதலீட்டாளர்களின் பணத்தை மீட்டுத் தரும் நிஜப்புலி உங்கள் எதிரே வந்தால் என்ன ஆகும்?

முன்னேற்றத்திற்கு தேவையானவை...
மத்தியில் பா.ஜ.க.ஆட்சி அமைந்தால் மம்தாவின் ஏசல்களைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல், மேற்கு வங்காள மாநிலத்தின் முன்னேற்றத்துக்கு தேவையானவற்றை செய்து தருவோம். அதே வேளையில், உங்கள் மாநில முதல்வரும் அவரது வேலையை ஒழுங்காக செய்வார்.

இரட்டை ஆதாயம்....
மத்தியில் பா.ஜ.க. தலைமையில் பலமான ஆட்சி அமைந்தால் உங்களுக்கு இரட்டை ஆதாயமாக அமையும். நாங்களும் உங்களுக்கு தேவையான நல்லவற்றை செய்வோம். உங்கள் முதல் மந்திரியும் இந்த நாடகங்களை எல்லாம் நிறுத்திக் கொண்டு ஆட்சியின் மீது அதிக அக்கறை செலுத்த தொடங்குவார்.

கட்டாயம்...
நான் நூறு கிலோ மீட்டருக்கு சாலைகளை போட்டால், அவர் பத்து கிலோ மீட்டர் அளவுக்காவது சாலை போட வேண்டிவரும். நான் உங்களுக்கு ஒரு லட்சம் வீடுகளை கட்டித் தந்தால், அவர் பத்தாயிரம் வீடுகளையாவது கட்டித் தர வேண்டிய நிலை ஏற்படும்.

ரசகுல்லா...
பிறகு, உங்களின் (மேற்கு வங்காளம் மாநில மக்கள்) இரண்டு கைகளிலும் ‘ரசகுல்லா' தான். மோடியையும் வேலை செய்ய அனுமதியுங்கள். மம்தாவையும் வேலை செய்ய அனுமதியுங்கள். ஒரு போட்டி இருக்கட்டும். இரண்டுக்கும் வித்தியாசத்தை பாருங்கள்.

காகிதப்புலியா..? நிஜப்புலியா..?
காகிதப் புலியா? நிஜப் புலியா? யார் சிறப்பாக வேலை செய்கிறார்கள் என்பதை பாருங்கள்' என இவ்வாறு அவர் பேசினார்.












Click it and Unblock the Notifications