மத்திய பல்கலைக்கழகங்களில் கொடிக் கம்பம் நிறுவ.. ரூ. 45 லட்சம் செலவாகுமாம்!
டெல்லி: மத்திய பல்கலைக்கழகங்களில் தேசியக் கொடியைப் பறக்கவிட்டு விலைமதிப்பில்லா தேசிய ஒருமைப்பாட்டை உருவாக்க நினைத்தாலும் அதற்கான செலவுதான் கண்ணைக் கட்டும் வகையில் அமைந்துள்ளது.
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் மற்றும் ஹைதராபாத் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் நடந்த நிகழ்வுகளைச் சுட்டிக் காட்டிய மத்திய அரசு, உயர்க்கல்வி நிறுவனங்களில் மாணவர் இடையே ஒற்றுமையையும், ஒருங்கிணைப்பையும் ஏற்படுத்துவது குறித்து துணைவேந்தர்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
அப்போது மத்திய பல்கலைக்கழக வளாகத்தின் முக்கிய பகுதியில் 207 அடி கம்பத்தில் தேசியக் கொடியை பறக்கவிடுவதற்கு மத்திய அரசு உத்தரவிட்டது. இதை அனைத்து துணைவேந்தர்களும் ஒரு மனதாக ஏற்றுள்ளனர்.
மேலும், நாடு முழுவதும் உள்ள அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களிலும் 207 அடி உயர கொடிக்கம்பத்தில் தேசிய கொடியை பறக்கவிட வேண்டும் என்று மத்திய மனித ஆற்றல் துறையும் உத்தரவிட்டுள்ளது.
ஆனால், 200 அடிக்கும் மேலான கம்பத்தில் தேசியக் கொடியை பறக்கவிடுவதற்கான செலவு ரூபாய் 40 முதல் 45 லட்சம் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அதனைப் பராமரிப்பதற்கே கிட்டதட்ட 65,000 ரூபாய் செலவாகும் என்று தேசியக் கொடி ஆணையத் தலைவரான கே.வி.சிங் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.