செஷல்ஸ் கடற்பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ள இந்திய கடற்படை விமானம் பி-8ஐ!
டெல்லி: இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான பி-8ஐ என்ற கண்காணிப்பு விமானம், செஷல்ஸ் தீவில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளது.
மார்ச் 20ம் தேதி முதல் இந்த விமானம் தனது பணியைத் தொடங்கியுள்ளது. இந்தியா மற்றும் செஷல்ஸ் நாடுகளிடையே ஏற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் இந்த விமானமானது செஷல்ஸுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்திய கடற்படையின் கண்காணிப்பு விமானம் செஷல்ஸில் பணியில் ஈடுபடுத்தப்படுவது இதுவே முதல் முறை என்று கடற்படை செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
கடந்த காலத்தில் இந்தியக் கடற்படையின் ரோந்துக் கப்பல்கள் இரண்டு முறை செஷல்ஸ் தீவின் சிறப்புப் பொருளாதார மண்டலப் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. ஆண்டுக்கு இரண்டு முறை இவை பணியில் ஈடுபடுத்தப்பட்டன.
கடைசியாக 2015ம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்தியக் கடற்படைக் கப்பல்கள் செஷல்ஸில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தன. தற்போது கண்காணிப்புப் பணிக்காக அனுப்பப்பட்டுள்ள விமானம் மார்ச் 23ம் தேதி வரை அங்கு பணியில் ஈடுபட்டிருக்கும்.
இந்தியப் பெருங்கடல் பகுதியில் சட்டவிரோத நடவடிக்கைகள், கொள்ளை போன்றவற்றைத் தடுக்கவும், அத்தகைய நடவடிக்கைகளை ஒடுக்கும் வகையிலும் இந்த பாதுகாப்புப் பணியில் இந்தியக் கடற்படை ஈடுபட்டுள்ளது.
கடந்த ஆண்டுதான் அரக்கோணம் கடற்படைத் தளத்தில் வைத்து பி-8ஐ விமானப்பிரிவை பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார் என்பது நினைவிருக்கலாம்.