பிரதமர்- முதல்வர் சந்திப்பு குறித்து விமர்சனம்: இளங்கோவனுக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ்!
டெல்லி: பிரதமர் மோடி- முதல்வர் ஜெயலலிதா சந்திப்பு குறித்து விமர்சனம் செய்த தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பிரதமர் நரேந்திரமோடி கடந்த 7-ந் தேதி சென்னை வந்த போது முதல்வர் ஜெயலலிதாவை அவருடைய வீட்டில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கருத்து தெரிவித்தார்.
அவரது கருத்து அ.தி.மு.க.வினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனால் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக அவருக்கு எதிராக அ.தி.மு.க.வினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர்.
அ.தி.மு.க. தொண்டர்களின் போராட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் முதல்வர் ஜெயலலிதா நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் இளங்கோவனுக்கு எதிராக அ.தி.மு.க.வினர் போராட்டத்தை தொடர வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.
தற்போது இந்த விவகாரத்தை தேசிய மகளிர் ஆணையம் கையிலெடுத்துள்ளது. இது தொடர்பாக மகளிர் ஆணையத்தின் தலைவரான தமிழக பா.ஜ.க. பிரமுகர் லலிதா குமாரமங்கலம் கூறியதாவது:
பிரதமர் மோடி- முதல்வர் ஜெயலலிதா சந்திப்பு பற்றி அவதூறாக பேசியது குறித்து விளக்கம் அளிக்கும்படி இளங்கோவனுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவர் தன்னுடைய விளக்கத்தை 5 நாட்களுக்குள் அனுப்ப வேண்டும்.
அவருடைய விளக்கம் திருப்தி அளிக்காவிட்டால் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்படும்.
இவ்வாறு லலிதா குமாரமங்கலம் தெரிவித்தார்.
தற்போது டெல்லியில் இருக்கும் இளங்கோவன், காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரை சந்தித்து விளக்கம் அளிக்க தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார்.
டெல்லியில் உள்ள இளங்கோவனிடம் மகளிர் ஆணையத்தின் நோட்டீஸ் குறித்து கேட்ட போது, எந்த நோட்டீஸும் இதுவரை எனக்கு வரவில்லை. அப்படியே வந்தாலும் அதற்கு முறைப்படி விளக்கம் அளிப்பேன் என்று தெரிவித்தார்.