மேற்கு ஆப்பிரிக்காவில் 45,000 இந்தியர்கள்: எபோலா வைரஸை இந்தியாவுக்கு கொண்டு வரும் அபாயம்
டெல்லி: எபோலா வைரஸ் பரவி வரும் நாடுகளில் மொத்தம் 44 ஆயிரத்து 700 இந்தியர்கள் உள்ளனர். அவர்கள் நாடு திரும்புகையில் வைரஸை இந்தியாவுக்கு கொண்டு வரும் அபாயம் உள்ளது.
மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் பரவி வரும் எபோலா வைரஸ் தாக்கி இதுவரை 932 பேர் பலியாகியுள்ளனர். மேலும் பலர் வைரஸால் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் இது குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் நாடாளுமன்றத்தில் கூறுகையில்,
45,000 இந்தியர்கள்
எபோலா வைரஸ் வேகமாகப் பரவும் கினியாவில் 500 இந்தியர்கள், லைபீரியாவில் 3 ஆயிரம் பேர், சியர்ரா லியோனில் 1, 200 பேர் மற்றும் நைஜீரியாவில் 40 ஆயிரம் இந்தியர்கள் உள்ளனர். நிலைமை மோசமானால் அவர்கள் அனைவரும் நாடு திரும்பக்கூடும் என்றார் ஹர்ஷ்வர்தன்.
தடுப்பு நடவடிக்கை
எபோலா வைரஸ் இந்தியாவில் பரவாமல் இருக்கத் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.
ஆய்வு கூட்டம்
மேற்கு ஆப்பிரிக்காவில் எபோலா வைரஸ் பரவி வருகையில் சுகாதார சேவைகள் டைரக்டர் ஜெனரல் ஜெகதீஷ் பிரசாத் கடந்த 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் கூட்டம் நடத்தி நிலைமை குறித்து ஆய்வு செய்துள்ளார் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சக வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.
அபாயம்
இந்தியாவில் எபோலா அபாயம் பற்றி ஆய்வு நடத்த ஹர்ஷ்வர்தன் குடியேற்றத் துறை, சிவில் விமான போக்குவரத்து துறை, ராணுவம் மற்றும் உலக சுகாதார அமைப்பு அதிகாரிகளுடன் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தியுள்ளார்.