அப்பாவிகளை தீவிரவாதிகள் என கைது செய்தால் என்னிடம் கூறுங்கள்: ராஜ்நாத் சிங்
டெல்லி: இந்தியாவில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்று கூறி எந்த அப்பாவியாவது கைது செய்யப்பட்டிருந்தால், செய்யப்பட்டால் அதை தனது கவனத்திற்கு கொண்டு வருமாறு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
லோக்சபாவில் இந்திய யூனியன் முஸ்லீம் கட்சி எம்.பி. இ. அகமது ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புக்கு கண்டனம் தெரிவித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில்,
ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு என் கட்சியினர் யாரும் ஆதரவளிக்க மாட்டார்கள் என்று அவர்கள் சார்பில் நான் தெரிவித்துக் கொள்கிறேன். ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர் இஸ்லாத்திற்கு எதிராக செயல்படுவதால் அவர்களை நாங்கள் எப்பொழுதுமே எதிர்ப்போம் என்றார்.
இதையடுத்து பேசிய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறுகையில்,
இந்திய வாலிபர்களில் மிகவும் குறைவானவர்களே ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆதரவு அளிக்கிறார்கள். அந்த அமைப்பில் தங்கள் குழந்தைகள் சேர்வதற்கு சிறுபான்மையின பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சந்தேகத்தின் பெயரில் எந்த ஒரு சிறுபான்மையினத்தவரும் கைது செய்யப்பட மாட்டார்கள். அவ்வாறு யாராவது அப்பாவிகள் கைது செய்யப்பட்டிருந்தால் அதை என் கவனத்திற்கு கொண்டு வாருங்கள்.
தீவிரவாத அமைப்புக்கு ஆதரவளிக்கக் கூடாது என சிறுபான்மையின பெற்றோர் தங்கள் குழந்தைகளிடம் தெரிவிப்பதை பாராட்டுகிறேன். ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது என்றார்.