நேதாஜிக்கு என்ன நடந்தது என முதலில் கூறுங்கள், பிறகு பாரதரத்னா தரலாம்...: குடும்பத்தார் கோபம்
கொல்கத்தா: நேதாஜிக்கு என்ன நடந்தது, அவர் காணாமல் போன மர்மத்தை வெளிக் கொண்டு வாருங்கள் என மத்திய அரசிடம் அவரது குடும்பத்தார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மத்தியில் ஆட்சி அமைத்துள்ள பாஜக அரசு, ரிசர்வ் வங்கியிடம் பாரத ரத்னா விருதுக்கு ஐந்து பதக்கங்களைத் தயாரிக்குமாறு ரிசர்வ் வங்கியின் நாணயத் தயாரிப்பு பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியானது. இந்த 5 பதக்கங்களும் முன்னாள் பிரதமர் வாஜ்பாய், கன்ஷிராம், நேதாஜி உள்ளிட்டோருக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில், இந்த விருதை ஏற்க மறுத்துள்ள நேதாஜி குடும்பத்தினர், முதலில் அவர் காணாமல் போனதற்கான மர்மத்தை வெளிக்கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து கொல்கத்தாவில் நேதாஜியின் பெயரன் சந்திர குமார் போஸ் பிடிஐ செய்தியாளரிடம் கூறியதாவது :-
ஆதாரம் எங்கே...?
நேதாஜி கடந்த 1945ஆம் ஆண்டு காணாமல் போனார். அவரது உயிரிழப்புக்குப் பிறகு மத்திய அரசு "பாரத ரத்னா' விருதைக் கொடுக்க விரும்பினால், அவர் எப்போது உயிரிழந்தார் என்பதைத் தெரிவிக்க வேண்டும். ஆனால் அதற்கான ஆதாரம் எங்கே?
ஆவணங்கள் தேவை...
இந்த விருதின் மூலம் நேதாஜிக்கு பெருமை சேர்க்க விரும்பினால், அவரின் உயிரிழப்பு குறித்த அரசு ஆவணங்கள் மீண்டும் வகைப்படுத்தப்பட வேண்டும்.
மர்மம் விலகும்...
அதன் மூலம் அவர் காணாமல் போனதற்கான மர்மம் வெளிவரும்.
விருது தேவையில்லை...
எங்களது குடும்ப உறுப்பினர்கள் 60 பேரிடமும் பாரத ரத்னா விருது தொடர்பாக பேசினேன். நேதாஜி சார்பில் இந்த விருதை ஏற்க யாரும் தயாராக இல்லை.
பொருத்தமான விருதல்ல...
அனைவரும் அவர் காணாமல் போனதற்கான மர்மத்தைக் கண்டுபிடிக்கும் வரை, இது நேதாஜிக்கு பொருத்தமான விருதாக இருக்காது என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
கடிதம்...
முன்னதாக, நேதாஜி காணாமல் போனது குறித்து விசாரணை நடத்த உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையிலான சிறப்பு விசாரணைக்குழுவை மத்திய அரசு அமைக்க வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு நேதாஜியின் குடும்பத்தினர் அண்மையில் கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.