17 கட்சிகளின் ஆதரவு.. ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவேன்.. மீராகுமார் நம்பிக்கை
ஜனாதிபதி தேர்தலில் 17 கட்சிகளின் ஆதரவு இருப்பதால் தான் வெற்றி பெறுவேன் என மீரா குமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
டெல்லி: ஜனாதிபதி தேர்தலில் 17 கட்சிகளின் ஆதரவு இருப்பதால் தான் வெற்றி பெறுவேன் என எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் மீரா குமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளது. இதனால் புதிய ஜனாதிபதி தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த மாதம் 17ம் தேதி நடைபெறுகிறது.
பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளராக பீகாரின் முன்னாள் கவர்னர் ராம் நாத் கோவிந்த் தனது வேட்புமனுவை கடந்த 23ம் தேதி தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து, காங்கிரஸ் தலைமையில் 17 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து முன்னாள் சபா நாயகர் மீரா குமாரை ஜனாதிபதி வேட்பாளராக களம் இறக்கியுள்ளது.
இந்நிலையில், ராம்நாத் கோவிந்த் மற்றும் மீரா குமார் இருவரும் தங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களையும் நேரில் சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர்.
இந்தத் தேர்தல் குறித்து மீரா குமார், "17 கட்சிகளின் ஆதரவு எனக்கு உள்ளது. எனவே, ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவேன்" என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.