எம்.எல்.ஏ.வாக பதவியேற்க சி.ஏ.ஏ.எதிர்ப்பு செயற்பாட்டாளர் அகில் கோகாய்-க்கு என்.ஐ.ஏ.நீதிமன்றம் ஜாமீன்!
குவஹாத்தி: அஸ்ஸாம் சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்ற சி.ஏ.ஏ. எதிர்ப்பு செயற்பாட்டாளர் அகில் கோகாய், எம்.எல்.ஏ.வாக பதவியேற்க தேசிய புலனாய்வு ஏஜென்சி (என்.ஐ.ஏ) நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
யாரைத்தான் நம்புவதோ?: பாஜக எதிர்ப்பு வாக்குகளை பிரித்ததா 2 அஸ்ஸாம் மாநில கட்சிகள்? பரபர சர்ச்சை!
மத்திய பாஜக அரசின் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக 2019-ம் ஆண்டு நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்றது. அஸ்ஸாமில் மிக உக்கிரமாக இந்த போராட்டத்தை முன்னெடுத்த செயற்பாட்டாளர்களில் ஒருவர் அகில் கோகாய்.
சிறையில் இருந்தபடியே கட்சி தொடக்கம்
இதனைத் தொடர்ந்து ஊபா எனப்படும் சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு உள்ளிட்ட 13 வழக்குகள் அகில் கோகாய் மீது பாய்ந்தன. அவருக்கு ஜாமீனும் மறுக்கப்பட்டது. இதன் பின்னர் அகில் கோகாய் ரைஜோர் தள் என்ற அரசியல் கட்சியை சிறையில் இருந்தபடியே தொடங்கினார்.
சிறையில் இருந்தபடியே போட்டி
அண்மையில் நடைபெற்ற அஸ்ஸாம் சட்டசபை தேர்தலில் ரைஜோர் தள் சார்பில் 19 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இவர்களில் அகில் கோகாய் ஒருவர். சிவ்சாகர் தொகுதியில் போட்டியிட்ட அகில் கோகாய்க்கு அவரது 83 வயது தாயார் பிரியாடா கோகாய் தீவிர பிரசாரம் செய்தது நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்தது. இந்த தேர்தலில் அகில் கோகாய் வெற்றி பெற்றார்.
சர்ச்சையில் அகில் கோகாய்
அதேநேரத்தில் ரைஜோர் தள் மற்றும் அஸ்ஸாம் ஜதிய பரிஷத் ஆகியவை சி.ஏ.ஏ. எதிர்ப்பு வாக்குகளை பிரித்துவிட்டதாகவும் இதனால்தான் காங்கிரஸ் தலைமையிலான மெகா கூட்டணி ஆட்சி அமைக்க முடியாமல் போனதாகவும் விமர்சனங்கள் எழுந்தன. மேலும் தற்போதைய முதல்வரான ஹிமந்த பிஸ்வாஸ் ஷர்மா, சி.ஏ.ஏ. எதிர்ப்பு வாக்குகளை பிரிக்கவே 2 கட்சிகளை பாஜக உருவாக்கியதாக கூறியதும் சர்ச்சையானது.
அகில் கோகாய்க்கு ஜாமீன்
இந்நிலையில் அகில் கோகாய் எம்.எல்.ஏ.வாக பதவியேற்பதற்காக அவருக்கு தேசிய புலனாய்வு ஏஜென்சி செவ்வாய்க்கிழமையன்று ஜாமீன் வழங்கியது. இருப்பினும் அகில் கோகாய் எந்த தேதியில் பதவியேற்க உள்ளார் என்பது குறித்து முடிவு செய்யவில்லை என அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.