சிமி தீவிரவாதிகள் சிறையில் இருந்து தப்பியது குறித்து என்.ஐ.ஏ. விசாரணை- மபி அரசு
போபால் சிறையில் இருந்து சிமி தீவிரவாதிகள் தப்பியது குறித்து தேசிய புலனாய்வு ஏஜென்சி விசாரணை நடத்தும் என்று மத்திய பிரதேச அரசு அறிவித்துள்ளது.
போபால்: சிமி தீவிரவாதிகள் 8 பேர் சிறையில் இருந்து தப்பியது குறித்து தேசிய புலனாய்வு ஏஜென்சி (என்ஐஏ) விசாரணை நடத்தும் என்று மத்திய பிரதேச அரசு அறிவித்துள்ளது. அதேநேரத்தில் சிமி தீவிரவாதிகள் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து என்.ஐ.ஏ. விசாரணை நடத்த தேவையில்லை என்றும் மபி அரசு கூறியுள்ளது.
போபால் சிறையில் சிறைக் காவலை படுகொலை செய்துவிட்டு நேற்று அதிகாலை 8 சிமி தீவிரவாதிகள் தப்பி ஓடினர். அவர்கள் தப்பி ஓடி போபால் புறநகரில் பதுங்கியிருந்த போது 'என்கவுண்ட்டரில்' 8 பேரும் சுட்டுக் கொல்லப்பட்டதாக மபி அரசு அறிவித்தது.
[Read This: போபால் அருகே சிமி தீவிரவாதிகள் 8 பேரை சுட்டு வீழ்த்திய 'என்கவுண்டர்' வீடியோ.. மீடியாவில் வெளியானது]
இதற்கு ஆதாரமாக ஒரு வீடியோ காட்சியும் வெளியானது. ஆனால் இது போலி என்கவுண்ட்டர் என மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியும் வலியுறுத்தி வருகிறது.
இதனிடையே சிமி தீவிரவாதிகள் தப்பியது குறித்து தேசிய புலனாய்வு ஏஜென்சி விசாரணை நடத்தும் என்று மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் பூபேந்திரசிங் தெரிவித்துள்ளார். ஆனால் சிமி தீவிரவாதிகள் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து என்.ஐ.ஏ. விசாரணை நடத்த தேவை இல்லை என்றும் பூபேந்திரசிங் கூறியுள்ளார்.