ஒன்பது கட்ட பேச்சுவார்த்தை... சிறிய முன்னேற்றம்... சீனா மோதல் குறித்து அமைச்சர் ஜெய்சங்கர்
அமராவதி: எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றம் தொடர்பாகச் சீனாவுடன் ஒன்பது கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளதாகவும் வரும் காலங்களிலும் பேச்சுவார்த்தை தொடரும் என்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்,
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே எல்லையில் கடந்தாண்டு மார்ச் மாதம் முதலே பதற்றம் நிலவி வருகிறது. அதிலும் குறிப்பாக, ஜூன் மாதம் நடைபெற்ற கல்வான் மோதலுக்குப் பின் நிலைமை மோசமானது.
இரு தரப்பும் எல்லையில் அதிகளவில் ராணுவத்தைக் குவித்து வருகின்றனர். இதன் காரணமாக எல்லையில் போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதைத் தவிர்க்க இருதரப்பும் தொடர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன இருப்பினும், எல்லையிலிருந்து இன்னும் பெரியளவில் ராணுவ வீரர்கள் திரும்பப் பெறப்படவில்லை.
அமைச்சர்கள் பேச்சுவார்த்தை
எல்லையில் ஏற்பட்டுள்ள பிரச்னை தொடர்பாக இரு தரப்பு ராணுவ உயர் அதிகாரிகளும் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று விஜயவாடாவில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது இரு நாட்டு அமைச்சர்களும் இது தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு உள்ளதா என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த ஜெய்சங்கர், வீரர்களைத் திரும்பப் பெறுவது என்பது சிக்கலான விஷயம் என்றார்.
ராணுவ தளபதிகள்
மேலும், "புவியியலைத் தெளிவாகப் புரிந்துகொண்டிருக்க வேண்டும். அப்போதுதான் எந்தெந்த வீரர்கள் எந்த இடங்களில் உள்ளனர் என்பது நமக்குத் தெளிவாகத் தெரியும். அப்படித் தெரிந்து பேச்சுவார்த்தை நடத்தினால் மட்டுமே பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படும். இதன் காரணமாகவே பேச்சுவார்த்தைகள் ராணுவத் தளபதிகளால் மேற்கொள்ளப்படுகிறது" என்று அவர் கூறினார்.
முன்னேற்றம்
தொடர்ந்து பேச்சுவார்த்தை குறிப்புப் பேசிய அவர், "இதுவரை இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே ஒன்பது கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளது. இதில் சிறிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என நம்புகிறோம். ஆனால், இது களத்தில் ஒரு பெரிய மாறுபாட்டை ஏற்படுத்தியுள்ள முன்னேற்றம் எனக் கூற முடியாது" என்றும் அவர் கூறினார்.
வீரர்கள் திரும்பப் பெற வேண்டும்
மேலும், இது தொடர்பாக அவரும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் தேவையான பேச்சுவார்த்தைகளைச் சீன அமைச்சர்களுடன் நடத்தி வருவதாகவும் அதில் சில இடங்களில் குவிக்கப்பட்டுள்ள வீரர்களைத் திரும்பப் பெற்றுக்கொள்ளச் சீனா ஒப்புக்கொண்டதாகவும் தெரிவித்தார். கடந்தாண்டு ஜூன் மாதம் வீரர்களைத் திரும்பப் பெறும் நடவடிக்கையின்போது தான், கல்வான் பள்ளத்தாக்கில் மிகப் பெரிய மோதல் நடைபெற்றது. இந்த மோதல் நிலைமையை மேலும் மோசமாக்கியது குறிப்பிடத்தக்கது.