ஆம்புலன்ஸ் இன்றி மகளின் உடலை தோளில் சுமந்து சென்ற தந்தை! ம.பியில் நடந்த சோகம்.. கதறிய குடும்பம்
போபால்: மத்திய பிரதேசத்தில் உடல் நலக்குறைவால் 4 வயது சிறுமி அரசு மருத்துவமனையில் இறந்த நிலையில் ஆம்புலன்ஸ் கிடைக்காததால் சிறுமியின் உடலை அவரது தந்தை தோளில் சுமந்து சென்ற சம்பவம் நடந்துள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் சதாபூர் மாவட்டத்தை சேர்ந்தவர் லட்சுமண் அகிர்வார். இவரது 4 வயது மகள் இருந்தார். கடந்த சில நாட்களாக சிறுமி உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்தார்.
மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் திடீரென்று சிறுமியின் உடல் நலம் அதிகமாக பாதிக்கப்பட்டது. இதையடுத்து சிறுமி புக்ஸ்வாக சுகாதார மையத்தில் அனுமதிக்கப்பட்டார்.
சிறுமி பலி
இந்த மருத்துவமனையில் சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பிறகு மேல் சிகிச்சைக்காக மாவட்ட தாமோ மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் சிறுமிக்கு சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி சிறுமி இறந்தாள். இதையடுத்து உடலை கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வசதியை மருத்துவமனை நிர்வாகம் வழங்கவில்லை.
பஸ்சில் கொண்டு செல்லப்பட்ட உடல்
இதனால் மனம் உடைந்த ராதாவின் குடும்பத்தினர் அவரது உடலை கம்பளியில் சுற்றி அரசு மருத்துவமனையில் இருந்து பஸ் மூலம் புக்ஸ்வாகா பகுதிக்கு வந்தனர். அதன்பிறகு சிறுமியின் தந்தை லட்சுமண் அகிர்வார் நாகர் பஞ்சாயத்தில் ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தி தரக்கோரி கூறினார். இங்கும் உதவி கிடைக்கவில்லை.
தோளில் சுமந்த தந்தை
இதையடுத்து தந்தை லட்சுமண் அகிர்வார் மற்றும் சிறுமியின் தாத்தாவான மன்சுக் அகிர்வார் ஆகியோரின் மாறிமாறி சிறுமியின் உடலை தோளில் சுமந்து சொந்த கிராமமான பாடிக்கு வந்தனர். இந்நிலையில் ஆம்புலன்ஸ் வசதி கிடைக்காமல் அவர்கள் சிறுமியின் உடலை தோளில் சுமந்து செல்லும் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. இதற்கு பொதுமக்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
உதவி கேட்கவில்லை
இதுபற்றி தாமோ மாவட்ட டாக்டர் மம்தா திமோரி கூறுகையில், ‛‛யாரும் எங்களிடம் ஆம்புலன்ஸ் வசதி உள்ளிட்ட எதையும் கேட்கவில்லை. கேட்டு இருந்தால் ரெட் கிராஸ் அல்லது தனியார் தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் ஆம்புலன்ஸ் வசதியை செய்து கொடுத்து இருப்போம்'' எனக்கூறி மாவட்ட நிர்வாகத்தின் மீதான குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்தார்.
இன்னொரு சம்பவம்
இதேபோல் மத்திய பிரதேசம் மாநிலம் சாகர் மாவட்டத்தில் உள்ள காதகோட்டா சுகாதார மையத்தில் இறந்த இளைஞரின் உடலை அவரது சகோதரர் பகவன் தாஸ் தள்ளுவண்டியில் சொந்த ஊருக்கு எடுத்து சென்றுள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், ‛‛உடலை கொண்டு செல்ல வாகன வசதி கேட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை. தனியார் வாகனத்தில் உடலை எடுத்து செல்லும் அளவுக்கு வசதியில்லை. இதனால் தள்ளுவண்டியில் உடலை எடுத்து சென்றேன்'' என்றார். இருப்பினும் இந்த குற்றச்சாட்டை பிளாக் மருத்துவ அதிகாரி சுயாஸ் சிங்கை மறுத்துள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், ‛‛பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என டாக்டர்கள் கூறினார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து குடும்பத்தினர் இளைஞரின் உடலை எடுத்து சென்றனர். வாகன வசதி குறைபாட்டால் இது நடைபெறவில்லை'' என்றார்.
கர்ப்பிணி சாவு
மேலும் கார்கோன் மாவட்டத்தில் கர்ப்பிணி பெண் ஒருவர் பிரசவ வலியால் துடித்தார். இதையடுத்து குடும்பத்தினர் ஆம்புலன்ஸ்க்கு போன் செய்து பார்த்தனர். ஆனால் ஆம்புலன்ஸ் வசதி அவர்களுக்கு கிடைக்கவில்லை. இதையடுத்து அவர்கள் கர்ப்பிணியை கட்டிலில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது செல்லும் வழியிலேயே கர்ப்பிணி இறந்தார். இதுபற்றி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுதான் புதிய இந்தியாவா?
மத்திய பிரதேசத்தில் இவ்வாறு தொடர்ச்சியாக ஆம்புலன்ஸ் வசதி குறைப்பாட்டால் நிலையில் பல்வேறு அவல சம்பவங்கள் நடந்து வருகின்றன. மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடக்கும் நிலையில் இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவுகிறது. இதனை பார்க்கும் நெட்டிசன்கள் இதுதான் புதிய இந்தியாவா? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.