டெல்லியில் வரலாறு காணாத மின்வெட்டு: பொதுமக்கள் அவதி- சாலைமறியல்
டெல்லி: தலைநகர் டெல்லியில் வரலாறு காணாத வெயிலும், கடுமையான மின்வெட்டும் நிலவுவதால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
டெல்லியில் கடந்த 62 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடும் வெப்பம் நிலவுகிறது. கடந்த சனிக்கிழமை அதிகபட்சமாக 117 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. இந்த வெப்பத்திற்கு காரணம் மழை இன்னும் தொடங்காததே காரணம் என்கின்றனர் வானிலை நிபுணர்கள்.
ஒருபுறும் வெயில் கொடுமை
தலைநகரில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருப்பதால் பகல் பொழுதில் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வருவது குறைந்துள்ளது.
வதைக்கும் மின்வெட்டு
மறுபுறம் தலைநகர் டெல்லியில் நிலவும் மின்பற்றாக்குறை மக்களை மேலும் புழுக்கத்தில் தள்ளியுள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
சாலைமறியல் போராட்டம்
மின்வெட்டுப்பிரச்சினைக்கு தீர்வுகாண வலியுறுத்தி பொதுமக்கள் சாலைகளில் இறங்கி மறியலில் ஈடுபட்டனர். பேருந்துகளின் கண்ணாடிகளை உடைத்தனர்.
வணிகவளாகங்களில் கட்
இதனையடுத்து மின்பற்றாக்குறையை சமாளிக்க இரவு 10 மணிக்கு மேல் வணிக வளாகங்களில் மின் விளக்குகளை ஒளிரவிடக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.
ஏ.சிக்கு தடை
மேலும் அரசு அலுவலகங்களில் பிற்பகல் 3.30 மணி முதல் 4.30 மணி வரை குளிர்சாதன பெட்டியை அணைத்து வைக்கவும் டெல்லி அரசு முடிவு செய்துள்ளது.
மத்திய மின்சாரத்துறை அமைச்சர் ஆய்வு
டெல்லியில் கடுமையான மின் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், அங்கு நடைபெற்று வரும் மின் வினியோகப் பணிகளை மத்திய மின்சாரத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் நள்ளிரவு ஆய்வு செய்தார்.
சீரான மின்விநியோகம்
டெல்லியின் அசோக் நகர், மகாராணி பாக் உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்ற அமைச்சர் பியூஷ் கோயல், மின் வினியோகத்தை சீரமைப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை நேரில் பார்வையிட்டார். பின்னர், அங்கிருந்த திட்ட இயக்குனர்களிடம் துரித கதியில் பணிகள் நடைபெற்று வருவதை கேட்டறிந்து உறுதி செய்து கொண்டார்.
அரசியலாக்க விரும்பவில்லை
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கோயல், டெல்லியில் நிலவும் மின் தடைப் பிரச்னையை அரசியலாக்க விரும்பவில்லை என்றும், கடந்த 12 ஆண்டுகளாக மின் வினியோகத்தை மேம்படுத்தத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படாததே தற்போதைய சிக்கலுக்கு காரணம் என்றும் தெரிவித்தார்.