டீ, பன்னு வாங்கக் கூட காசு இல்ல... ஏடிஎம் மையம் வந்த ராகுலிடம் குமுறிய மக்கள்
500,1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளதால் டீ, பன்னு வாங்க காசு இல்லை என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுலிடம் மக்கள் குறை கூறியுள்ளனர்.
டெல்லி: 500,1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளதால் டீ, பன் வாங்கக் கூட காசு இல்லை என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியிடம் டெல்லி மக்கள் குறை கூறியிருக்கின்றனர்.
பாஜக தலைமையிலான மத்திய அரசு கடந்த 8-ம் தேதி நள்ளிரவு முதல் 500,1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அதிரடியாக அறிவித்தது. இதனால் ஏழை-எளிய மக்கள் பெரும் இன்னல்களை நாள்தோறும் சந்தித்து வருகின்றனர்.

வங்கிக் கிளைகளின் வாயிலில் காத்து நின்று அவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் அவர்களது அன்றாடப் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், டெல்லி ஜகான்கீர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் ஏ.டி.எம். மையத்தில் பொதுமக்கள் பணம் எடுக்க காந்திருந்த தகவல் அறிந்து காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, இன்று காலை அங்கு நேரில் சென்றார்.
அப்போது, பொதுமக்களிடம் அவர் குறைகளை கேட்டறிந்தார்.
வங்கிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டு, ஏ.டி.எம். இயந்திரத்தில் இருந்த பணம் தீர்ந்துவிட்ட நிலையில், பால் வாங்க, டீ, பன்னு வாங்க என அன்றாட செலவுக்கே மிகவும் சிரமப்படுவதாக மக்கள் புகார் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து இந்திரலோக் பகுதியில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் வரிசையில் நின்றிருந்த மக்களை சந்தித்தும் ராகுல்காந்தி குறைகளை கேட்டறிந்தார். அங்குள்ள மக்களும் வங்கி ஏடிஎம்களில் பணம் இல்லாமல் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருவதாக கூறினர்.












Click it and Unblock the Notifications