ஆந்திர அரசு ஊழியர்களுக்கு சம்பளம் போட பணம் இல்லை: சந்திரபாபு நாயுடு கவலை
ஆந்திர அரசின் நிதி நிலை மோசமாக இருப்பதாக அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.
அமராவதி: அரசின் கையிருப்பு பணம் குறைவாக இருப்பதால் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் போடவே பணம் இல்லை என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கவலை தெரிவித்துள்ளார்.
ஆந்திராவில் இருந்து தெலுங்கானா மாநிலம் பிரிக்கப்பட்டதால் ஆந்திர மாநிலத்தின் தொழில் வளர்ச்சி மந்தமடைந்திருக்கிறது. ஆந்திர அரசுக்கு கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஆனால் அரசின் செலவினமோ அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதை தடுப்பதற்கு மாநில அரசு எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.
இந்நிலையில் அமராவதியில் முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று செய்தியாளர்களை சந்தித்த போது கூறுகையில், ஆந்திர அரசின் நிதி நிலை மோசமாக இருப்பதாகவும், ஆந்திர அரசு ஊழியர்களுக்கு சம்பளம் போடுவதற்கு கூட பணம் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
அதிக கடனில் தான் அரசாங்கமே நடந்து கொண்டிருக்கிறது என்றும் சந்திரபாபு நாயுடு கூறினார்.வரம்பிற்கு அதிகமாகவே அரசு கடன் வாங்கியுள்ளதால் மேலும் கடன் வாங்க இயலாத சூழல் உள்ளது எனவும் அரசின் சில செலவினங்களில் சிலவற்றை குறைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இதனிடையே மாநில அரசின் தகவல் படி, ஆந்திர அரசு ரூ 13.673 கோடி கடனில் சிக்கித் தவிக்கிறது. தற்காலிக தலைமைச் செயலகம் அமைப்பதற்கு ரூ.500 கோடிக்கு மேல் செலவழிக்கப்பட்டுள்ளது. முதல்வர் அலுவலகம் மற்றும் வீடுகளுக்கு மட்டுமே ரூ.100 கோடிக்கு மேல் செலவு செய்யப்பட்டுள்ளது.
இன்னும் பணிகள் முழுமையாக முடியவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், கட்டுமானப் பணிகளுக்கு தற்போது ரூ.5.82 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த 6 மாதங்களில் மாநில அரசின் வருவாய் ரூ.22,800 கோடியாக உயர்ந்துள்ளது. ஆனால் அதேநேரம் ரூ.6641 கோடி பற்றாக்குறை உள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.